கேரளா பாப்பாவுக்கு ஆயுசு கெட்டி... 7 மணிநேரத்தில் 516 கிமீ பறந்து காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்
கேரளாவில் 500 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணிநேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் கடந்து ஒரு மாத குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளார் டிரைவர்.
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரு மாத குழந்தையின் உயிரை காப்பாற்ற 516 கிமீ தூரத்தை 7மணி நேரத்தில் கடந்துள்ளார் ஆம்புலன்ஸ் டிரைவர். குழந்தையை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் உதவிய போலீசாருக்கும் பாராட்டுகள் குவிகிறது.
கேரள மாநிலம் கண்ணூரில் ஒரு மாத குழந்தை ஒன்று இதய நோய் காரணமாக பரியாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையின் உடல் நிலை மோசமானதால் உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள சித்ரா மருத்துமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
10 மணி நேரத்திற்குள் அங்கு அனுமதித்தால்தான் குழந்தையை காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறினர். இதனால் குழந்தையின் பெற்றோர் கலக்கமடைந்தனர். 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை காப்பாற்ற வேண்டுமே என்று கடவுளை வேண்டினர்.
ஏனெனில் கண்ணூர்- திருவனந்தபுரம் இடையேயான 516 கிமீ தூரத்தை கடக்க குறைந்தது 13 மணி நேரம் ஆகும். அந்த அளவிற்கு சாலை போக்குவரத்து சிரமமானது. இதனால் 10 மணி நேரத்திற்குள் திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு செல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.
டிரைவர் உறுதி
ஆபத்பாந்தவனாக வந்தார் ஆம்புலன்ஸ் டிரைவர் சமீம். சற்றும் யோசிக்கவே இல்லை. தன்னால் குறிப்பிட்ட நேரத்திற்குள் திருவனந்தபுரத்திற்கு குழந்தையை கொண்டு செல்ல முடியும் என்று உறுதியாக கூறவே பெற்றோர் சற்றே நம்பிக்கை அடைந்தனர்.
ஃபேஸ்புக்கில் பதிவு
கண்ணூர் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் இந்த தகவலை பதிவிட்டனர். சில நிமிடங்களில் கேரளா முழுவதும் இந்த தகவல் பரவியது. இதையடுத்து புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு குழந்தையுடன் ஆம்புலன்ஸ் கண்ணூரில் இருந்து புறப்பட்டது.
பறந்த டிரைவர்
வாட்ஸ்அப் மூலம் தகவல் அறிந்தவர்களும் போலீசாரும் சாலையில் ஆங்காங்கே நின்று ஆம்புலன்ஸ் தடையின்றி கடந்து செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். டிரைவர் சமீம் சற்றும் தாமதிக்கவில்லை அதிவேகமாக ஆம்புலன்சை ஓட்டி 7 மணி நேரத்தில், அதிகாலை 3.30 மணிக்கு திருவனந்தபுரம் மருத்துவமனையை அடைந்தார்.
கடவுளான டிரைவர்
திருவனந்தபுரம் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆம்புலன்சை வேகமாக ஓட்டி சென்று குழந்தைடைய காப்பாற்றிய டிரைவர் சமீமிற்கும், உதவிய போலீசாருக்கும் பாராட்டுகள் குவிகின்றன. உயிருக்கு போராடிய குழந்தைக்கு மறுபிறவி அளித்துள்ளார் டிரைவர் சமீம்.