மிஸ்டர் ராகுல்!இப்படியே பேசிகிட்டு இருந்தா ஒட்டுமொத்த காங்கிரஸும் காணமல் போய்விடும்: அமித்ஷா
குவஹாத்தி: ராகுல் காந்தி தமது போக்கை நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தால் இந்தியாவில் இருந்தே ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் காணாமல் போய்விடும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக அலுவலகங்களை திறந்து வைத்து அமித்ஷா பேசியதாவது: வன்முறைகள், போராட்டங்களால் நிறைந்த பகுதியாக இருந்தது அஸ்ஸாம். அது ஒரு காலம். இப்போது ஏப்ரல் 14-ந் தேதி பிஹூ நடனத்தில் கின்னஸ் சாதனை படைப்பதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறது அஸ்ஸாம் மாநிலம்.

வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுக்காக மத்திய பட்ஜெட்டில் காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் ரூ36,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ரூ76,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு முதல் வடகிழக்கு மாநிலங்களின் உள் கட்டமைப்புக்காக 2.65 லட்சம் கோடி நிதி வழ்ங்கப்பட்டிருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் 70% விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அஸ்ஸாமின் போட்டோலாந்து, கர்பி அங்லாங் பகுதிகள் அமைதி பூங்காவாக இருக்கின்றன. 8 ஆயுதம் தாங்கிய பழங்குடி அமைப்புகள் சரணடைந்துள்ளன. அண்டை மாநிலங்களுடனான பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளன.

அஸ்ஸாமில் 2-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்த பின் 41,000 அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அஸ்ஸாமில் முதலாவது எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி ஏப்ரல் 14-ந் தேதி தொடங்கி வைக்க உள்ளார். அஸ்ஸாமில் ஏற்கனவே 12 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 12 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன.
ஒரு காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் காங்கிரஸின் கோட்டையாக இருந்தன. இப்போது ஒட்டுமொத்தமாக 8 வடகிழக்கு மாநிலங்களில் இருந்தும் காங்கிரஸ் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாட்டுக்கு செல்கிறார். நமது நாட்டை பற்றி வ்மர்சித்து பேசுகிறார். ராகுல் காந்தி இப்படியே தமது போக்கை தொடர்ந்து கொண்டிருந்தால் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இருந்தே காங்கிரஸ் கட்சி காணாமலேயே போய்விடும். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக 300க்கும் அதிகமான இடங்களில் வென்று பிரதமர் மோடி 3-வது முறையாக பதவி ஏற்பார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.












Click it and Unblock the Notifications