ஆயுதங்களை ஏந்திய அசாம் இளைஞர்களை... அமைதி பாதைக்கு திருப்பியது நாங்கதான்... அமித்ஷா பெருமிதம்!
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் ஆயுதங்களை கையில் வைத்திருந்த இளைஞர்களை பிரதான அமைதியான நீரோட்டத்தில் சேர்த்தது பாஜகதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
அங்கு இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பெரிய மருத்துவக் கல்லூரி, ஒன்பது புதிய சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றிற்கும் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.
அசாம் மாநிலத்தில் முதல்வர் சர்பானந்த் சோனோவால் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்கத்துக்கு சுற்றுப்பயணம் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு இருந்து இன்று அசாமுக்கு சென்றார். அங்கு தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.
மேலும், பெரிய மருத்துவக் கல்லூரி, ஒன்பது புதிய சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றிற்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். காமரூபில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- அசாமில் ஆச்சார்ய சங்கர்தேவின் பங்களிப்புகள் மாநிலததின் வரலாறு, நாடக எழுத்து, கலை மற்றும் கவிதைக்கு அங்கீகாரம் அளித்தன. ஆனால் ஆச்சார்ய சங்கர்தேவின் பிறப்பிடத்திற்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை.
ஆபரேஷன் லோட்டஸ்: அஸ்ஸாம் பக்கம் செல்லும் அரசியல் "சாணக்கியன்".. கட்சி தாவும் இரு காங் தலைவர்கள்?
அசாமிய கலாச்சாரம் மற்றும் கலைகள் இல்லாமல் இந்தியாவின் கலாச்சாரம், கலைகள் முழுமையடையாது. எனவே அசாமில் மொழி, கலாச்சாரம், கலைகளை வலுப்படுத்துவதில் பாஜக உறுதியாக உள்ளது.
அசாமில் வளர்ச்சி தொடர்ந்து நடக்கிறது, தொடர்ந்து நடக்கும், ஆனால் இங்கு கருத்தியல் மாற்றமும் தேவை, அது வளர்ச்சியின் மூலம் மட்டுமே நடக்க முடியாது. வடகிழக்கில் இளைஞர்களின் கைகளில் பிரிவினைவாதிகள் ஆயுதங்களைக் கொடுக்கும் ஒரு காலம் இருந்தது.
போடோலாண்ட் பிராந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், அசாமில் அமைதியை நிலைநாட்டும் பணியை மோடி அரசு தொடங்கியுள்ளது.ஆயுதங்களை கையில் வைத்திருந்த போடோ இளைஞர்கள் இப்போது பிரதான அமைதியான நீரோட்டத்தில் சேர்ந்துள்ளனர் என அமித் ஷா கூறினார்.