பாஜக தலைவராக அமித்ஷா... நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியின் வலதுகரமான குஜராத்தின் அமித்ஷா நாளை அறிவிக்கப்பட இருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கிறார் ராஜ்நாத். தற்போது அவர் உள்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை கடைபிடிக்கப்படுகிறது.
யார் தலைவர்?
இதனால் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த போதே அக்கட்சியின் புதிய தலைவர் யாராக இருக்கலாம் என்ற பரபரப்பான விவாதம் களை கட்டியது. பாஜகவில் நட்டாவின் பெயர் முதலில் தீவிரமாக அடிபட்டது.
அமிஷ்தாவுக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு
ஆனால் அக்கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கமோ, குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரும் பிரதமர் நரேந்திர மோடியின் வலதுகரமுமான அமித்ஷாவையே முன்னிறுத்தி வந்தது. அமித்ஷாதான் தேர்தலின் போது பாரதிய ஜனதாவின் உத்தரப்பிரதேச மாநில பொறுப்பாளராக இருந்தார்.
அமித்ஷா வியூகம்
அவரது வியூகத்தாலேதான் பாரதிய ஜனதா அம்மாநிலத்தில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றிய கையோடு மத்தியில் ஆட்சியிலும் அமர்ந்தது. அமித்ஷாவை முன்னிறுத்தியே எதிர்வரும் மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல்களையும் எதிர்கொள்ளலாம் என்பது பாஜக- ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் வியூகம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதனால் அவரை பாரதிய ஜனதாவின் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நாளை கூடுகிறது.
இந்தக் கூட்டத்தில் அமித்ஷா முறைப்படி பாஜகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படக் கூடும் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.