'இத்தாலி கண்ணாடி' போட்டுட்டு பார்த்தா வளர்ச்சி கண்ணுக்குத் தெரியாது... ராகுலை விளாசிய அமித்ஷா!
அமேதி தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை ராகுல்காந்தி புறக்கணித்து வருவதாக பாஜக தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
அமேதி: இத்தாலி நாட்டுக் கண்ணாடியை போட்டுக் கொண்டு பார்த்தால் இந்தியாவின் வளர்ச்சி கண்ணுக்குத் தெரியாது என்று பாஜக தலைவர் அமித்ஷா ராகுல்காந்தியை விளாசியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இன்று பேரணியில் பங்கேற்றார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் தொகுதியான அமேதியில் நடைபெற்ற பேரணியில் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் போது உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உடன் இருந்தார்.
பேரணியின் போது பேசிய அமித்ஷா, 60 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, 3 ஆண்டு மோடி ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை கேட்கிறார். ராகுல் காந்தியை இந்த தொகுதி மக்கள் தேர்வு செய்து எம்பி ஆக்கினீர்கள், ஆனால் அவர் ஒரு முறை கூட அமேதி கலெக்டர் அலுவலகம் கூட வந்ததில்லை. ஆனால் மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் ஸ்மிருதி இரானி அமேதிக்கு வந்து வளர்ச்சிப் பணிகளை செய்கிறார் என்று கூறினார்.
பாஜக வளர்ந்துள்ளது
பாஜக அமேதியில் நடத்தும் பேரணி காங்கிரஸ் வளர்ந்த மண்ணில் பாஜக எப்படி வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதை பறைசாற்றும். உத்திரபிரதேசத் தேர்தலில் 10ல் 6 தொகுதிகளை பாஜக வென்றுள்ளது என்றார் அவர்.
அமேதியில் வளர்ச்சி இல்லை
எங்கள் பிரதமர் எந்த கேள்வியாக இருந்தாலும் அதற்கு பதிலளிப்பார். அமேதி நேரு- காந்தி குடும்ப அரசியலைப் பார்த்திருக்கிறது. ஆனால் இது வரை எந்த வளர்ச்சியையும் காணவில்லை. ராகுல் காந்தில் தனது கண்களில் இத்தாலியில் தயாரிக்கப்பட்ட கண்ணாடியை அணிந்திருக்கிறார். அதனால் தான் அவரால் இந்தியாவில் ஏற்படும் வளர்ச்சியை பார்க்க முடியவில்லை.
வித்தியாசம் தெரியும்
60 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து பாஜகவை புறக்கணத்தீர்கள் ஆனால் மோடிக்கும், பாஜகவிற்கும் ஒரு வாய்ப்பை தந்தால் உங்களுக்கு நிச்சயம் வித்தியாசம் தெரியும் என்றும் ராகுல்காந்தி பேசினார்.
காங்கிரஸ் பிரச்சாரம்
அமேதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிராமந்தோறும் காந்தியின் வாசகங்களை கொண்டு சேர்க்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாஜக வளர்ச்சியடைவதை தடுக்கும் விதமாக இதை காங்கிரஸ் செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது.