"ரெட் அலர்ட்.." அமிர்தசரஸ் பொற்கோவிலை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு!
சண்டிகர்: இந்திய பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பொது இடங்கள், மக்கள் கூடும் இடங்களை நோக்கி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே ஆன்மீகத் தலமான சீக்கியர்களின் புனித அமிர்தசரஸ் பொற்கோவிலைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. இருப்பினும், அதை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் இந்தியா மீது பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தி வந்தது.

பொற்கோவில்
இதற்கிடையே மூன்றாவது நாளான இன்று, பகல் நேரத்திலும் கூட பாகிஸ்தான் தாக்குதலை நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மக்கள் வாழும் பகுதிகள், மத ரீதியான தலங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமிர்தசரஸில் நேற்றிரவு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது 15 ட்ரோன்கள் காணப்பட்டது. இதையடுத்து அங்கு முழுமை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அங்குப் பொதுமக்களின் நடமாட்டத்திற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமான இடங்களில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் தாக்குதல்
அதேநேரம் பாகிஸ்தான் நடத்திய இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. அதேபோல குடியிருப்பு உட்படக் கட்டிடங்கள் எதுவும் பாதிப்படையவில்லை. இதற்கிடையே பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலைக் குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த அமிர்தசரஸ் சீக்கியர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சீக்கியர்கள் இந்தப் புனிதத் தலத்திற்கு வருகை தருவார்கள். இது பாகிஸ்தான் முக்கிய நகரங்களில் ஒன்றான லாகூரிலிருந்து 42 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலைக் குறிவைத்துத் தான் பாக். ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் வானிலேயே தடுத்து அழித்து வருகிறது.
இந்திய ராணுவம்
பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பான வீடியோவை இந்திய ராணுவம் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அதில் மேலும், "ஆபரேஷன் சிந்தூர்... பாகிஸ்தான் தனது ட்ரோன் மற்றும் பிற ஆயுதத் தாக்குதல்கள் மூலம் நமது மேற்கு எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. அப்படி தான், இன்று அதிகாலை 5 மணியளவில், அமிர்தசரஸின் காசா கான்ட் மீது பல ட்ரோன்களை பறந்தன. இந்த விரோதமான ஆளில்லா விமானங்களை நமது வான் பாதுகாப்பு அமைப்பு உடனடியாக அழித்தது.
இந்திய இறையாண்மையை மீறி, பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்க முயலும் பாகிஸ்தானின் அப்பட்டமான முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய ராணுவம் எதிரிகளின் திட்டத்தை முறியடிக்கும்" என்று பதிவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
உச்சக்கட்டப் பாதுகாப்பு
இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமிர்தசரஸில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்குப் பொற்கோவில் உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு நிலவும் சூழலைப் பாதுகாப்புப் படைகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. தேவையான தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட 20 நகரங்களை நோக்கி பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும் அதை இந்தியப் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக முறியடித்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications