நான் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளானேன்.. கேரளா காங்கிரஸ் எம்.பியின் மனைவி புகார்
கேரளா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிஷா ஜோன் எழுதிய புத்தகத்தில், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து எழுதியுள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிஷா ஜோன் எழுதிய புத்தகத்தில், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து எழுதியுள்ளார். அவர் சக அரசியல் நண்பர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக எழுதியுள்ளார்.
நிஷா ஜோன், கேரளா காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஸ் கே.மணியின் மனைவி ஆவார். நிஷா தற்போது ''தி அதர் சைட் ஆஃப் திஸ் லைஃப் - ஸ்னிப்பட்ஸ் ஆஃப் மை லைஃப் அஸ் எ பொலிடீஷியன் வைஃப் (''The Other Side Of This Life - Snippets of my life as a Politician's Wife")'' என்று புத்தகத்தை எழுதியுள்ளார்.
இதன் பொருள் ''இந்த வாழ்வின் இன்னொரு பகுதி - ஒரு அரசியல்வாதியின் மனைவியுடைய வாழ்க்கை துணுக்குகள்'' என்று குறிப்பிடலாம். இதில்தான் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து குறிப்பிட்டு இருக்கிறார்.
பாலியல் தொல்லை
நிஷா ஜோன் அந்த புத்தகத்தில் ''நான் ரயிலில் பயணித்துக் கொண்டு இருந்த போது எதிர் இருக்கையில் இருந்த ஆண் என் காலை தடவினார். நான்கு முறை தெரியாமல் செய்வது செய்தார். நான் காலை எடுக்கும் போதெல்லாம், வேறு இருக்கைக்கு மாறுவது போல என் காலை தடவிக்கொண்டே இருந்தார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
யாரை
இதில் நிஷா யாரை பற்றி குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் பெரிய அரசியல்வாதியின் மகன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கட்சி பணி காரணமாக இருவரும் ஒன்றாக சென்றதாக அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
நடவடிக்கை எடுக்கவில்லை
மேலும் ''நான் இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தேன். அவர் நீங்கள் இரண்டு பேரும் பெரிய அரசியல் கட்சியை சேர்த்தவர்கள். கடைசியில் நீங்கள் ஒன்றாக சேர்ந்து கொள்வீர்கள். பின் என்னுடைய வேலைக்குத்தான் பிரச்சனை வரும் என்று கூறினார்'' என புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
யாரை
இந்த புகார் தன்னை நோக்கித்தான் வைக்கப்பட்டது என்று ஷோன் ஜார்ஜ் என்ற நபர் கூறியுள்ளார். இவர் தந்தை பி சி ஜார்ஜ் சுயேச்சை எம்.எல்.ஏவாக இருக்கிறார். ஷோன் ஜார்ஜ் , நிஷா இருவரும் காங்கிரஸ் கட்சி பணிகளுக்காக ஒன்றாக பயணித்து இருக்கிறார்கள். இது பெரிய பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது.
மன்னிப்பு கேட்க வேண்டும்
ஷோன் ஜார்ஜ் ''என்னை பற்றி தவறாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதற்கு நிஷா உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அந்த புத்தகத்தில் இருப்பவர் பெயரை குறிப்பிட வேண்டும். புத்தகம் விற்க வேண்டும் என்றெல்லாம் இப்படி செய்ய கூடாது'' என்றுள்ளார்.