பவானிசிங்கை நீக்க கோரிய வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பில் திடீர் குழப்பம்..நடந்தது என்ன?
டெல்லி: ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக கூடாது என்று திமுக அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான இறுதிகட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. விசாரணை முழுவதும் முடிந்த நிலையில், வரும் 15ம்தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஆனால் இந்த தீர்ப்பு தேதியை வெளியிடுவதில் மீடியாக்கள் குழப்பமடைந்தன. இதற்கு காரணம் உள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தபோது, அரசு தரப்பு வக்கீலாக ஆஜரானவர் பவானிசிங். அந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தார், நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலும், பவானிசிங்கே அரசு வக்கீலாக ஆஜரானார். ஆனால், கர்நாடக அரசு பவானிசிங்கை ஆஜராகுமாறு ஆணை பிறப்பிக்கவில்லை, தமிழக லஞ்ச ஒழிப்பு துறைதான் அந்த ஆணையை கொடுத்தது.
பவானிசிங், குற்றவாளி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்று குற்றம்சாட்டும் திமுகவின் அன்பழகன், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகள் தரப்பு வாதம் கடந்த வாரம் புதன்கிழமை நிறைவடைந்துள்ளது.
ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பாலி நாரிமன், பவானிசிங் ஆஜரானதில் சட்ட விதிமுறை மீறல் இல்லை என்று வாதிட்டார்.
இன்று இறுதிவாதம் நடந்தது. நீதிபதிகள் மதன்லோகுர் மற்றும் பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், "பவானிசிங்கை மேல்முறையீட்டு விசாரணையின்போது அரசு வக்கீலாக ஆஜராக கர்நாடக அரசு நியமிக்கவில்லை" என்றார்.
இதைத்தொடர்ந்து வாதிட்ட அன்பழகன் தரப்பு வழக்கறிஞர், அந்தியார்ஜுனா, "பவானிசிங்கை, இந்த வழக்கில் ஆஜராக நியமிக்கவில்லை என்று கர்நாடக அரசே கூறிவிட்டதால், ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் பவானிசிங் ஆஜரானது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். ஹைகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்துவிட்டது. அதன் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாக வாய்ப்புள்ளது. எனவே, இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும்வரை, மேல்முறையீட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிபதிகள், சாப்பாட்டு இடைவேளைக்காக கிளம்பி சென்றனர்.
இதன்பிறகு, நீதிபதிகள், இருதரப்பையும், தங்களது சேம்பருக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இரு தரப்புமே, நீதிபதிகள் எதற்காக அழைக்கிறார்கள் என்ற குழப்பத்திலேயே சென்றுள்ளனர். அப்போது, பவானிசிங் வழக்கின் மீதான தீர்ப்பை ஏப்ரல் 15ல் அறிவிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்பழகன் தரப்பு கோரிக்கையை ஏற்று, தீர்ப்பு வழங்கும் 15ம் தேதிவரை, கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4பேரின் மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவேதான், முதலில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படவில்லை என்று செய்தி வெளியிட்ட மீடியாக்கள், அதை மாற்றி, 15ம்தேதி தீர்ப்பு என்று வெளியிட வேண்டியதாயிற்று.












Click it and Unblock the Notifications