ஆந்திரா: பாஜக கூட்டணியில் மீண்டும் சந்திரபாபு நாயுடு? ஜெகனுக்கு செக்? சொந்த காசில் சூனியம்?
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு டெல்லி பாஜக மேலிடம் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம், ஜனசேனா, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாஜக ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருந்தது.

பாஜகவுடன் உறவு முறிவு: ஆனால் ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியது தெலுங்குதேசம். அத்துடன் நிற்காமல், பிரதமர் மோடியை மிகவும் இழிவாக, தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து பேசியிருந்தார் சந்திரபாபு நாயுடு. இதனால் உங்க முகத்திலேயே முழிக்கமாட்டோம் ரேஞ்சுக்கு பாஜக அவரை ஒதுக்கியே வைத்திருந்தது.
பாஜகவும் சந்திரபாபு நாயுடுவும்: இந்நிலையில் சந்திரபாபு நாயுடு சிறைக்கு போவதற்கு முன்னதாக டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார். இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்குதேசம் இணைகிறது என தகவல்கள் பரவியது. ஆனால் ஆந்திரா மாநில பாஜகவினரால் இன்னமும் சந்திரபாபு நாயுடுவை ஜீரணிக்க முடியாமல்தான் இருக்கின்றனர்.
கலகமூட்டிய பவன் கல்யாண்: இதனிடையே ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவை கைது செய்து சிறையில் அடைத்தார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவை சந்தித்த ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண், தெலுங்குதேசம் கட்சியுடன் கூட்டணி அறிவித்தார். இதனால் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி, பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறதா? என்ற கேள்வியும் சர்ச்சையும் எழுந்தது.
பவன் கல்யாண் முயற்சி: ஆனால் பாஜகவுடனும் கூட்டணி; தெலுங்குதேசத்துடனும் கூட்டணி என விளக்கம் கொடுத்தார் பவன் கல்யாண். அத்துடன் பாஜக, தெலுங்குதேசம், ஜனசேனா மூன்றும் இணைந்து கூட்டணி அமைத்தால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்கும் என்ற தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளை முன்வைத்து 3 கட்சி கூட்டணி குறித்து பாஜகவின் டெல்லி தலைமையிடம் வலியுறுத்தி வந்தார் பவன் கல்யாண்.

பாஜக- தெலுங்குதேசம் கூட்டணி?: இந்நிலையில்தான் தெலுங்குதேசம் கட்சியுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்த டெல்லி பாஜக மேலிடம் ஒப்புதல் கொடுத்துள்ளதாம். ஆந்திரா மாநில பாஜக தலைவராக இருக்கும், மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ஆர். மகளும், சந்திரபாபு நாயுடு மனைவியின் சகோதரியுமான புரந்தரேஸ்வரிதான் தெலுங்குதேசம் கட்சியுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுக்கப் போகிறாராம்.
பாஜகவில் பிரளயமா?: மேலும் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ஆட்சியில் மதமாற்றம் அதிகரித்துவிட்டது என்பதை மையமாக வைத்து 3 கட்சி கூட்டணி பிரசாரம் செய்வது என்பதும் மற்றொரு இலக்காம். ஏற்கனவே தெலுங்குதேசம் கட்சியுடனான கூட்டணி வேண்டாம் என்கிற மாநில பாஜக நிர்வாகிகள், முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சியில்தான் ஆந்திரா முழுவதும் கிராமங்கள் தோறும் 1,000க்கும் அதிகமான ராமர் கோவில்கள் கட்டப்பட்டன என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனராம். தெலுங்குதேசத்துடன் பாஜக கூட்டணி அமைத்தால் அம்மாநில பாஜகவில் பிரளயம் வெடிக்கும் என்பதும் மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications