20 தமிழர்கள் கொலை வழக்கை 2 மாதத்திற்குள் பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும்: ஹைகோர்ட்
ஹைதராபாத்: 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்க கொல்லப்பட்ட வழக்கை விசாரணை நடத்தி முடிக்க ஆந்திர அரசுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் 2 மாதம் கால அவகாசம் அளித்துள்ளது.
கடந்த 7ம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை அம்மாநில போலீசார் சுட்டுக் கொலை செய்தனர். இந்த வழக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 20 பேரை சுட்டுக் கொலை செய்த போலீசார் மீது கொலை வழக்கப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பலியானவர்களில் 6 பேரின் உடல்கள் மறுபிரேத பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மறுபிரேத பரிசோதனை செய்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் 20 தமிழர்கள் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஹைதராபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி செங்குப்தா, நீதிபதி பி.வி.சஞ்சய் குமார் ஆகியார் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அறிக்கை
ஆந்திர மாநில போலீசார் உயர் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் எந்த விவரமும் இல்லை என்று கூறி அதை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
போலீசார்
போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்த பிறகும் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் வரும் 30ம் தேதிக்குள் விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.
விசாரணை குழு
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரகுநாத் கூறுகையில், 20 தமிழர்கள் கொல்லப்பட்ட வழக்கை விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் ஐ.ஜி. ரவிசங்கர் அய்யனார் ஒரு என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். அப்படி இருக்கையில் அவர் தலைமையிலான விசாரணை குழுவை ஏற்க முடியாது. மேலும் குழுவில் உள்ள ஒருவர் என்கவுன்ட்டரில் தொடர்புடையவர் என்றார். அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள் கூறுகையில், வாய்வழி தகவல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் உங்கள் ஆட்சேபத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
2 மாதம்
விசாரணையை அடுத்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது, சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணையை முடிக்க 60 நாட்கள் அவகாசம் அளிக்கிறோம். அதற்குள் அவர்கள் விசாரணை நடத்தி முடித்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த விசாரணையில் இருந்து ஒவ்வொரு முறையும் விசாரணையின் முன்னேற்றம் பற்றிய அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும். விசாரணை எந்தவித பாரபட்சமும் இன்றி நடத்தப்பட வேண்டும்.
நீதிமன்றமே
விசாரணையில் திருப்தி ஏற்படவில்லை என்றால் நீதிமன்றமே விசாரணை குழு ஒன்றை அமைக்கும். இந்த விசாரணை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் அமைச்சர்கள் அல்லது அதிகாரிகளின் உத்தரவை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. வழக்கின் விசாரணை மே மாதம் 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.