தமிழ்நாட்டுக்கு சொட்டு தண்ணீர் கிடையாது! பாலாற்றில் புதிய தடுப்பணை! அடிக்கல் நாட்டி ஆந்திரா அடாவடி
அமராவதி: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி, சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படவிருப்பதாகவும், தேர்தல் முடிவடைந்த பிறகு மேலும் இரு தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் கூறியிருந்தார்.

பாலாற்றின் குறுக்கே கடந்த காலங்களில் 22 தடுப்பணைகள் கட்டப்பட்டிருப்பதால் தமிழ்நாட்டில் பாலாறு வறண்டு கிடக்கும் நிலையில், பாலாற்றில் புதிய அணை கட்டுவதென்பது பாலாற்றை பாசன ஆதாரமாக நம்பியிருக்கும் லட்சக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் செயல் என தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
குப்பம் பகுதியில் தடுப்பணை அமைப்பது என்பது, கடந்த 18 ஆண்டுக்களாக பிரச்னையாக நீடித்து வருகிறது. பாலாற்று நீரைப் பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் ராஜதானிக்கும் இடையே 1892 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளைக் கட்டக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது என்றும், அதற்கு மாறாக ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளைக் கட்டுவதும், ஏற்கெனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதமாகும் என்றும் அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.
இந்நிலையில், இன்று ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மட்டுமல்லாது, இதற்காக அம்மாநில அரசு ரூ.215 கோடி நிதியையும் ஒதுக்கியுள்ளாதாக கூறியுள்ளார். இந்த தடுப்பணையால் ஏற்கெனவே வறண்டு போயுள்ள பாலாறு, முற்றிலுமாக பாலைவனமாக மாறிவிடும் அபாயம் எழுந்திருக்கிறது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications