ஆன்லைன் ரம்மி சூதாட்டம்... போக்கர்... ஆந்திராவில் தடை!!
அமராவதி: ஆன்லைன் சூதாட்டமான ரம்மி மற்றும் போக்கர் ஆகியவற்றுக்கு ஆந்திரா அரசு தடை விதித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்கள் மாணவர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்வதால் தடை விதிக்கப்படுகிறது என்று ஆந்திரா அரசு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் தடை செய்வது குறித்து முடிவு செய்ய இன்று முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து மாநில தகவல் துறை அமைச்சர் பெர்னி வேங்கடராமையா கூறுகையில், ''ஆன்லைன் விளையாட்டுக்கள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது. இளைஞர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்கிறது. எனவே, இளைஞர்களை காப்பாற்றுவதற்காக ஆன்லைன் விளையாட்டை தடை செய்து இருக்கிறோம்.
ஆன்லைன் விளையாட்டுக்கு ஏற்பாடு செய்யும் அமைப்பாளர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். அபராதமும் விதிக்கப்படும். இது முதல் முறை குற்றம்புரிபவர்களுக்கு. இரண்டாவது முறையும் குற்றம் செய்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
இதுபோன்று தமிழகத்திலும் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விளையாட்டில் ஈடுபடும் பலரும் பணத்தை இழந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
ஆன்லைன் ரம்மி மூலம் இளைஞர்களின் பணம் பறிபோகிறது. ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்ய சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி ஏற்கனவே தெரிவித்துள்ளார். எனவே இதன் அடிப்படையில் தமிழகத்திலும் ஆன் லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்கப்படுமா என்று பார்ப்போம்.












Click it and Unblock the Notifications