ரோஜா ஆந்திர சட்டசபைக்குள் நுழைய இன்னும் ஓராண்டு தடை?
ஹைதராபாத்: ஆந்திர சட்டசபைக்குள் நுழைய நடிகை ரோஜாவுக்கு மேலும் ஓராண்டு தடை விதிக்க வேண்டும் என சட்டசபை உரிமைக்குழு பரிந்துரைத்துள்ளது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா, கடந்த ஆண்டு ஆந்திர சட்டசபையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேச எம்.எல்.ஏ.க்களை அவதூறாக பேசியதாக சபாநாயகர் சிவபிரசாத் ராவ் அவரை ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்தார்.
இதை எதிர்த்து ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் ரோஜா வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சபாநாயகரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம். ஆனாலும் சட்டசபை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ரோஜா அனுமதிக்கப்படவில்லை.
ரோஜா விவகாரம் குறித்து 21-ந்தேதி சபை விவாதிக்கும் என்று சபாநாயகர் சிவபிரசாத் ராவ் அறிவித்தார். நேற்று கூடிய ஆந்திர சட்டசபை ரோஜா விவகாரம் குறித்து 4 மணி நேரம் விவாதித்தது.
அப்போது, தெலுங்குதேசம் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. சூரியராவ் தலைமையிலான உரிமைக்குழு ரோஜா, சபையில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாக கூறி மீண்டும் ஓராண்டுக்கு இடை நீக்கம் செய்யும் விதமாக புதிய பரிந்துரை செய்தது.
அதேநேரம் அவர் இன்னொரு முறை உரிமைக்குழு முன்பாக ஆஜராகி விளக்கம் தர வாய்ப்பும் அளிக்கப்பட்டது. இந்த புதிய முடிவால் நடிகை ரோஜா ஆந்திர சட்டசபைக்குள் நுழைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.