பாகிஸ்தான் மீது மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்? முப்படைகள் உஷார் நிலையில் இருக்க உத்தரவு
ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். கொடூரமான சம்பவத்திற்கு பிறகு. சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய பயங்கரவாதிகளைப் பிடிக்க ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிறப்புப் படை, பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் இந்திய ராணுவம் 20-25 கி.மீ சுற்றளவில் ஒரு பெரிய சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தானின் பங்கு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
நான்கு பயங்கரவாதிகளில் இருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் மீது மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வாய்ப்ப உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முப்படைகள் நாட்டை உஷார் நிலையில் இருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இரண்டு தாக்குதல்
பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த செய்தி பாகிஸ்தான் நாட்டின் தலைமைக்கு தெரிய வந்த உடனேயே, இந்தியாவின் எதிர் நடவடிக்கைக்கு அஞ்சி பாகிஸ்தான், தனது விமானப்படையை மிகுந்த எச்சரிக்கையுடன் வைத்தது. கடந்த காலங்களில், நரேந்திர மோடி தலைமையிலான அரசு பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு பெரிய சர்ஜிகல் தாக்குதல்களை நடத்தியது .
மத்திய அரசு கோபம்
கடந்த 2016 இல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போது 2019 இல் பாலகோட் தாக்குதலின் போதும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. அந்த வகையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மிகவும் கொடுமையான தாக்குதல் ஆகும். இந்த தாக்குதால் இந்திய ராணுவமும், மத்திய அரசு உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறது.
மோடி அவசர ஆலோசனை
காஷ்மீர் தாக்குதல் குறித்து தகவல் அறிந்த உடன் கடும் கோபம் அடைந்த பிரதமர் நரேந்திர மோடி, நடந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் நேற்று சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு நாடு திரும்பினார். டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடந்தது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு கெடு
குறிப்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையேயான வாகா- அட்டாரி எல்லைகளை மூட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது; மேலும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு ஒரு வாரத்தில் வெளியேறவும் மத்திய அரசு கெடு விதித்துள்ளது; இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தையும் நிறுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. மேலும் எல்லையில் உஷார் நிலையில் படைகள் இருக்க வேண்டும் என்றும், முப்படைகளும் தயாராக இருக்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, பயங்கரவாதத்தை எந்த வகையிலும் சகித்துக்கொள்ள முடியாது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று உறுதி அளித்தார். இந்தியா ஒரு பழமை வாய்ந்த நாகரிகம் கொண்ட மிகப் பெரிய ஜனநாயக நாடு என்றும் இதுபோன்ற எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைகளையும் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்றும் ராஜ்நாத் சிங் ஆவேசமாக தெரிவித்தார்.
ராஜ்நாத் சிங் அதிரடி
இந்தக் கோழைத்தனமான செயலுக்கு எதிராக நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஒன்றிணைந்து நிற்கிறார்கள் என்றும் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் மட்டுமின்றி, இந்திய மண்ணில் இதுபோன்ற மோசமான செயல்களை திரைக்குப் பின்னால் இருந்து சதி செய்தவர்களுக்கும் விரைவில் உரிய பதிலடி கிடைக்கும் என்றும் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களின் விளைவாக நாடுகள் செயலிழந்து போனதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது என்றும் ராஜ்நாத் சிங் நேரடியாக பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் அச்சம்
இந்த சூழலில் பாகிஸ்தான் தனது ஜெட் விமானங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், எல்லையோர கிராமங்களில் மக்களை காலி செய்ய செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தான் தனது ராணுவத்தையும் ஐஎஸ்ஐ-யையும் உஷார் நிலையில் வைத்துள்ளது. அசாதாரண நடமாட்டத்தை பாகிஸ்தான் விமானப்படை கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் இந்தியா தீவிரவாதிகளை குறிவைத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் அச்சத்தில் விமானப்படை விமானங்களை எல்லையில் ரோந்து நடவடிக்கையில் இறக்கி உள்ளது.
தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)அமைப்பு தான் பால்ஹாம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. பயங்கரவாதக் குழுவினர் ஜம்முவின் கிஷ்த்வாரிலிருந்து கடந்து தெற்கு காஷ்மீரில் உள்ள கோகர்நாக் வழியாக பைசரனை அடைந்திருக்கலாம் என்று ராணுவ அதிகாரிகள் நம்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications