தடுப்புச் சுவராக வந்த தங்கை.. ஜெர்க்கான ஜெகன் மோகன்! காங்கிரஸில் ஷர்மிளா? ஆந்திர அரசியலில் அதிரடி
அமராவதி: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பல்வேறு அதிரடி அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில்தான் யாருமே எதிர்பார்க்காத நிகழ்வு ஆந்திர பிரதேச மாநில அரசியலில் அரங்கேற இருக்கிறது. ஆம், ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக வெளியான தகவல்தான் அது.

ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பிறகு ஆந்திர முதலமைச்சர் பதவியை தனக்கு வழங்காததால் அதிருப்தியில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். அவரது சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளாவும் அந்த கட்சியின் நிறுவன தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெலுங்கானா மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று தெலுங்கு மண்டலத்தில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியதை தொடர்ந்து ஒரு மாதம் கழித்து அக்கட்சியில் ஷர்மிளா இணையப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆந்திர பிரதேச காங்கிரஸ் கட்சியில் ஷர்மிளாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்க கட்சித் தலைமை முடிவு செய்து இருப்பதாகவும், 2024 மக்களவைத் தேர்தலிலும் அவருக்கு சீட் ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா மாநில சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு ஆண்டு முன்பாக கடந்த 2022 ல் ஒய்.எஸ்.ஷர்மிளா தெலுங்கானா மாநிலத்தில் பிரஜா பிரஸ்தனம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டார். அப்போது, தெலுங்கானா அரசு அந்த பாத யாத்திரை செல்ல தடை விதித்ததை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை அவர் மேற்கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
ஜெகன் மோகன் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த காலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை முன்னின்றி வழிநடத்தி பல்வேறு தேர்தல்களை எதிர்கொண்டார். இடைத்தேர்தலில் தன்னுடைய தாயாருடன் சென்று பிரச்சாரங்களில் ஈடுபட்டு கட்சியை வெற்றி அடைய செய்தார். இப்படி கட்சியின் வளர்ச்சிக்கு பெரும்பாடுபட்ட ஷர்மிளாவுக்கும், ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையே கடந்த 2021 ஆம் ஆண்டு மோதல் ஏற்பட்டது.
தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் இல்லாமல்போனதால் அதிருப்தியில் இருந்தார். இதனை தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர்.டி.பி என்ற கட்சியை தெலுங்கானாவுக்காக தொடங்கி பி.ஆர்.எஸ். கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். ஷர்மிளாவுக்கு ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களிலும் செல்வாக்கு உள்ள நிலையில், அவர் காங்கிரஸ் கட்சிக்கு தாவுவது ஜெகன் மோகன் ரெட்டிக்கு 2024 மக்களவைத் தேர்தல், அடுத்து வரும் ஆந்திர பிரதேச தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications