20 தமிழர்கள் பலிக்கு பதில் சொல்லுமா ஆந்திரா அரசு…: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
ஹைதராபாத்: ஆந்திர வனப்பகுதியில் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டித்தலைவர் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆந்திர மாநிலம், திருப்பதி சேஷாத்திரி மலையில் ஸ்ரீவாரிமெட்டு ஈசகுண்டா பகுதியில் செம்மரம் வெட்டும் கும்பலை பிடிக்க அந்த மாநில வனத்துறையினர் முயற்சித்த போது 20 பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாக்கப்பட்டுள்ளனர்.
இதில் 12 தமிழர்கள் பலியாக்கப்பட்டதாக நம்பகத்தகுந்த தகவல்கள் உறுதி செய்கின்றன.
மரம் வெட்டும் கும்பலை துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. வனத்துறையினரின் இத்தகைய தாக்குதல் பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திடுகின்றன. இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு ஆந்திர மாநில அரசுக்கு இருக்கிறது. சமீபகாலமாக செம்மர கடத்தலில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதிலும் நடவடிக்கை எடுப்பதிலும் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன.
இவை குறித்து இரு மாநில சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கொண்ட குழுவின் மூலமாக பாரபட்சமற்ற விசாரணைக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications