உள்ளாட்சித் தேர்தல்: சீமாந்திராவில் காங்கிரஸ் படுதோல்வி- தெலுங்கனாவில் அமோக வெற்றி!
ஹைதராபாத்: உள்ளாட்சித் தேர்தல்களில் சீமாந்திராவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியையும் தெலுங்கானாவில் அமோக வெற்றியையும் பெற்றுள்ளது.
ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா - சீமாந்திரா உருவாக்கப்பட்டது. ஜூன் மாதம் 2-ந்தேதி அதிகாரப்பூர்வமாக இரு மாநிலம் உருவாக உள்ளது.
2 மாநிலத்துக்கும் கடந்த மார்ச் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. 10 மாநகராட்சி, 145 நகராட்சிகளுக்கு மார்ச் 30-ந்தேதியும், மற்றும் ஊராட்சி பதவிகளுக்கு ஏப்ரல்-6, 11-ந் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டால் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வழக்கு தொடரப்பட்டதால் வாக்கு எண்ணிக்கை ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது இந்த இரு மாநிலத்திலும் தேர்தல்கள் முடிந்து விட்டது. இதையடுத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
சீமாந்திராவில் தெலுங்குதேசம்
இதில் சீமாந்திராவில் 36 நகராட்சிகளை தெலுங்குதேசம் கைப்பற்றியுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 11 நகராட்சிகளை கைப்பற்றியுள்ளது. மொத்தமாக 934 உள்ளாட்சி இடங்களை தெலுங்குதேசமும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 634 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஆனால் காங்கிரஸால் வெறும் 45 இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்தது.
தெலுங்கானாவில் காங்கிரஸ்
அதே நேரத்தில் தெலுங்கானாவில் 9 நகராட்சிகளை காங்கிரஸ் கட்சியும் 5 நகராட்சிகளையும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் கைப்பற்றியுள்ளன. மேலும் பல நகராட்சிகளில் காங்கிரஸ் முன்னணி வகித்து வருகிறது. மாநகராட்சிகளில் நிஜமாபாத், ராமகுண்டத்தை காங்கிரஸும் கரீம்நகரை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் கைப்பற்றியுள்ளன.
மொத்தமாக தெலுங்கானாவில் காங்கிரஸ் 394 இடங்களையும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 245 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி இங்கு 129 உள்ளாட்சி இடங்களைக் கைப்பற்றியுள்ளது.