உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஆளுனர்களும் ஆர்.டி.ஐ கீழ் வர வேண்டும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி!
அனைத்துத் துறைகளிலும் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டுமெனில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஆளுனர் உள்ளிட்டோரும் ஆர்டிஐயின் கீழ் வர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
டெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம், ஆளுனர் அலுவலகம் உள்பட அனைத்துமே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வர வேண்டும் என்று முதன்முறையான உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவ ராய் அமர்வு, சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் அனைத்து அமைப்புகளும் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டுமெனில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வர வேண்டும். அதிலும் குறிப்பாக ஆளுனர் அலுவலகம் மற்றும் இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் உள்ளிட்டவையும் ஆர்டிஐயின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறினர்.
2007ம் ஆண்டு ஜூலை- ஆகஸ்ட் மாதத்தில் கோவா அரசியல் சூழலை அறிந்து கொள்ளும் வகையில் ஆளுனர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. அப்போது அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மனோகர் பாரிக்கர் இந்தத் தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்தார்.
இதற்கு ஆளுனர் மாளிகை மறுப்பு தெரிவித்ததையடுத்து மும்பை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆளுனர் அலுவலகம் பொதுமக்களுக்கான அதிகார மையம் என்று கூறி அந்த காலக்கட்டத்தில் ஆளுனர், குடியரசுத் தலைவர் இடையேயான அறிக்கை பரிமாற்றங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதே போன்று இந்திய தலைமை நீதிபதியையும் ஆர்டிஐயின் கீழ் கொண்டு வருவது தொடர்பான வழக்கிற்காக மத்திய அரசு வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆஜரானார். அப்போது சட்ட பரிபாலனங்களுக்கு உட்பட்ட தலைமை நீதிபதிகள் இறையாண்மையை பாதுகாப்பவர்கள் எனவே அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது. தலைமை நீதிபதிக்கும், நீதிபதி அலுவலகத்திற்கும் இடையே எந்த ஒளிவு மறைவும் இல்லை, அதனால் அவற்றை ஆர்டிஐக்குள் கொண்டு வருவதில் எந்தத் தடையும் இல்லை. ஆளுனர் மற்றும் இந்திய தலைமை நீதிபதியையும் ஏன் ஆர்டிஐயின் கீழ் கொண்டு வரக்கூடாது என்று நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
நீதிபதிகள் நியமனத்தில் அரசுக்கு அரசியல் சாசன அமர்வுக்கும் இடையே மிகப்பெரும் சண்டை நடைபெற்று வரும் நிலையில் முதன்முறையாக நீதித்துறையையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் முதன்மை அமர்வு முதன்முறையாக கேட்டுள்ளது.
ஏற்கனவே சில உயர்நீதிமன்றங்கள் இந்திய தலைமை நீதிபதி ஆர்டிஐக்கு கீழ் வருவார் என்று கூறியுள்ளது. இதே போன்று கடந்த 2009ம் ஆண்ட டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதிகளும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்று உத்தரவிட்டதோடு நீதிபதிகள் தங்களது சொத்து விவரத்தை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர், இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இது வரை மிகப்பெரிய அதிகார மையங்களான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஆளுனர் ஆகியோரை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று அரசியல் சாசனம் கூறும் நிலையில் முதன்முறையாக இவர்களும் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களே என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்த அறிவுறுத்தலாக பார்க்கப்படுகிறது.