சிக்கிமில் வெள்ளம்.. வெறும் 48 மணி நேரத்தில் தொங்கு பாலம் கட்டி அசத்திய ராணுவத்தினர்! வீடியோ
கேங்டாக்: வடக்கு சிக்கிமில் ஆர்ப்பரிக்கும் ஆற்றின் குறுக்கே 48 மணி நேரத்தில் 150 அடி நீள தொங்கு பாலத்தை கட்டி ராணுவத்தினர் அசத்தியுள்ளனர். சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், ராணுவத்தினர் இந்த பாலத்தை கட்டியுள்ளனர்.
கடந்த மே 30ம் தேதி இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக வடகிழக்கு மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. கேரளாவில் தொடங்கிய பருவமழையானது, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து மத்திய இந்தியா வரை விரிவடைந்திருக்கிறது. அதேபோல, பருவமழையின் மற்றொரு கிளையானது, வடகிழக்கு மாநிலங்களில் மழைப்பொழிவை தீவிரப்படுத்தியுள்ளது.

கனமழை காரணமாக டார்ஜிலிங், கலிம்போங் மற்றும் காங்டாக் உள்ளிட்ட பகுதிகளுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, 1,500க்கும் மேற்பட்டவர்கள் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளதாகவும், 6 பேர் வரை உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளம் முக்கிய சாலைகளை அடித்து சென்றுள்ளதால், துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து வடக்கு சிக்கிமின் மங்கன் மாவட்டத்தின் எஸ்பி கூறுகையில், “சங்கலாங் பகுதியில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் டிசோங்கு, சுங்தாங், லாச்சென் மற்றும் லாச்சுங் உள்ளிட்ட பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இங்கு சில சுற்றுலாப்பயணிகள் சிக்கி தவிக்கின்றனர். அவர்கள் தங்கியிருக்கும் பகுதியிலேயே தொடர்ந்து தங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். வடக்கு சிக்கிமில் மொபைல் நெட்வொர்க் செயல்படவில்லை. எனவே அவர்களை தொடர்புகொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
உள்ளூர் மக்கள் கூறுகையில், “திடீர் வெள்ளம் எங்களை முடக்கியிருக்கிறது. வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. உணவு, உடை எதுவும் இன்றி நாங்கள் தவித்து வருகிறோம்” என்று கூறியுள்ளனர். பேரிடர் மீட்பு படையினர் வடக்கு சிக்கிமில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. இருப்பினும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் நிவாரணப்போருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், போக்குவரத்து துண்டிப்பை சரிசெய்யும் பணியில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு தற்காலிக தொங்கு பாலத்தை ராணுவத்தினர் உருவாக்கியுள்ளனர். திரிசக்தி கார்ப்ஸைச் சேர்ந்த இந்திய ராணுவப் பொறியாளர்கள், வடக்கு சிக்கிமில் 150 அடி தொங்கு பாலத்தை வெறும் 48 மணி நேரத்தில் வெற்றிகரமாகக் கட்டி அசத்தியுள்ளனர்.
#WATCH | Indian Army engineers of Trishakti Corps constructed a 150-feet suspension bridge in North Sikkim to re-connect the border villages which got cut off due to continued heavy rains, giving respite to the locales living in the cutoff locations.
— ANI (@ANI) June 23, 2024
The army engineers launched… pic.twitter.com/DlU5ZSoRNG
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இந்த பகுதியில் வெள்ளம் நீடித்து வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு உணவு, உடை, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க ராணுவத்தினர் இந்த தொங்கு பாலத்தை கட்டியுள்ளனர். பயங்கர வேகத்தில் பாயும் வெள்ளத்தின் மேலே ராணுவத்தினர் பாலம் கட்டும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அதேபோல வடக்கு சிக்கிமில் இயல்பு நிலை திரும்ப உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனையை மேற்கொண்டிருக்கிறார். நீர் நிலைகளில் ஏற்பட்ட உடைப்புதான் இந்த வெள்ளத்திற்கு முக்கிய காரணம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications