டெல்லியில் போராடிய விவசாயிகள் அருண் ஜேட்லியுடன் சந்திப்பு.. வறட்சி நிவாரணம் வழங்க அமைச்சர் உறுதி
டெல்லியில் தொடர்ந்து 7 நாட்களாக கடும் போராட்டத்தை மேற்கொண்டு வந்த விவசாயிகளை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இன்று சந்தித்தார். அப்போது வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
டெல்லி: கடந்த 7 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். மத்திய அமைச்சர்களின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மத்திய வேளாண் துறை அமைச்சரை சந்திக்க நேரம் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவித்தனர்.
இந்நிலையில், தங்களது கோரிக்கைகள் நிறைவேறாமல் டெல்லியில் இருந்து தமிழகம் திரும்ப மாட்டோம் என்று அறிவித்திருந்த விவசாயிகளை இன்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது விவசாயிகளுடன் அதிமுக எம்பிக்களும் உடன் இருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது, வறட்சி நிவாரணம் உரிய வகையில் வழங்கப்படும் என்று அருண் ஜேட்லி உறுதி அளித்துள்ளார்.