'அருண் ஜேட்லிக்கு துணை பிரதமர்' பதவி.. பஞ்சாப் முதல்வர் பாதல் பேச்சால் பாஜகவில் சலசலப்பு
டெல்லி/ அர்மிதசரஸ்: தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தால் அருண் ஜேட்லிதான் துணை பிரதமர் என்று பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்த கருத்து குறித்துக்கு 'அடக்கமாக' அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.
ராஜ்யசபா எம்.பியாக மூன்று முறை பதவி வகித்த அருண் ஜேட்லி தற்போது லோக்சபா தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கியுள்ளார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடுகிறார் அருண் ஜேட்லி.

அருண் ஜேட்லியை ஆதரித்து சிரோமணி அகாலிதளத்தின் தலைவரும் பஞ்சாப் மாநில முதல்வருமான பிரகாஷ்சிங் பாதல் நேற்று பிரசார கூட்டம் ஒன்றில் பேசுகையில், மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தால் துணை பிரதமராகவோ அல்லது நிதி அமைச்சராகவோ அருண் ஜேட்லிதான் வருவார் என்று கூறினார்.
பிரகாஷ்சிங் பாதலின் இந்த பேச்சு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அருண் ஜேட்லி, என்னைப் பொறுத்தவரையில் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை. பிரசாரத்தின் போது மிக சாதாரணமாகவே பாதல் அப்படி பேசினார். அகாலிதளத்துக்கும் பாஜகவுக்குமான உறவு சுமூகமானதாக இருக்கிறது என்றார்.
இது பற்றி கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி, தன்னுடைய விருப்பத்தைத்தான் பாதல் வெளிப்படுத்தியுள்ளார். பிரகாஷ்சிங் பாதல் ஒரு மூத்த தலைவர். ஆனால் அவர் தீர்மானிக்கக் கூடிய ஒரு முடிவாக அதை சொல்லவில்லை என்றார்.
அதே நேரத்தில் சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் சஞ்சர் ரெளத் கூறுகையில், முதலில் மோடி பிரதமராக பொறுப்பேற்கட்டும். அதன் பின்னர் துணை பிரதமர் பதவி பற்றி பேசுவோம் என்று பட்டும்படாமலும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications