மம்தா பானர்ஜி முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கியாகத்தான் பார்க்கிறார்.. போட்டு விளாசிய ஒவைசி!
கொல்கத்தா: மம்தா பானர்ஜியும், காங்கிரஸ் தலைவர்களும் முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கின்றனர் என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறினார்.
முஸ்லிம்கள் வாழ்க்கையில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று அசாதுதீன் ஒவைசி கூறினார்.மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.
அங்கு பாஜக-ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.
சூடுபிடிக்கும் தேர்தல் களம்
அங்கு இந்த முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. இதனால் பாஜகவின் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மேற்கு வங்கத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு வேட்டை நடத்தி வருகின்றனர்.
சுவேந்து-மம்தா நேருக்கு நேர் மோதல்
சமீபத்தில் பிரசாரத்தின்போது காலில் காயம் அடைந்த மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரசின் முன்பு மம்தாவின் நட்பாக இருந்து, தற்போது எதிரியாக இருக்கும் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியும், மம்தா பானர்ஜியும் நந்திகிராம் தொகுதியில் நேருக்கு நேர் மோதுகின்றனர். இது தவிர காங்கிரஸ் இடது சாரி கூட்டணி தனியாக களம் காண்கிறது. அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் போட்டியி டுகிறது.
அசாதுதீன் ஒவைசி பாஜக பி டீம்
மேற்கு வங்கத்தில் பாஜகவின் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் மம்தாவை தொடர்ந்து வசைபாடி வருகின்றனர். மம்தாவும் அவர்களுக்கு சுடச்சுட பதிலடி கொடுத்து வருகிறார். இதேபோல் மம்தாவும், . அசாதுதீன் ஒவைசிக்கும் இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. அசாதுதீன் ஒவைசி பாஜகவின் பி டீம் என்றும், பணம் பெற்றுக்கொண்டு வாக்குகளைப் பிரிக்கப் பார்க்கிறார் என்றும் மம்தா குற்றம் சாட்டினார். அவருக்கு பதிலடி கொடுத்த ஒவைசி, மம்தா முதலில் தனது கட்சியில் இருந்து பாஜகவுக்கு போகிறவர்களை தடுத்து நிறுத்தட்டும் என்றார் .
முஸ்லிமகள் எந்த பலனும் பெறவில்லை
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்யுவுள்ள அசாதுதீன் ஒவைசி நிருபர்களிடம் கூறியதாவது:- மேற்குவங்க மாநிலத்தில் மொத்தம் 78 தொகுதிகளில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் கணிசமாக உள்ளன. முஸ்லிம் வாக்காளர்கள் மிக அதிகமுள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 13 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம். மம்தா பானர்ஜியும், காங்கிரஸ் தலைவர்களும் முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கின்றனர். இதனால் மேற்குவங்க முஸ்லிமகள் எந்த பலனையும் பெறவில்லை. அவர்களின் வாழ்க்கையிலும் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று அசாதுதீன் ஒவைசி கூறினார்.