"ஜின்னாவின் ஆவி ராகுல் காந்திக்குள் புகுந்துவிட்டது.." பகீர் கிளப்பும் அசாம் பாஜக முதல்வர்
கவுஹாத்தி: உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் பிரசாரம் செய்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ராகுல் காந்தியை மிகக் கடுமையாகத் தாக்கி பேசினார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தவிர அனைத்திலும் பாஜகவே ஆட்சியில் உள்ளது.
எனவே, இந்தத் தேர்தலிலும் பெருவாரியான ஒரு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தொடர வேண்டும் என்பதையே பாஜக இலக்காகக் கொண்டுள்ளது. இதனால் அக்கட்சி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.
தேவபூமியை பாஜக-வால் மட்டுமே பாதுகாக்க முடியும் - உத்தரகாண்ட் பிரசாரத்தில் பிரதமர் மோடி அதிரடி!
பாஜக
மொத்தம் 70 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகண்ட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு பாஜக 57 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், இந்த முறை அவ்வளவு எளிதாக பாஜகவால் ஆட்சியைப் பிடிக்கும் எனச் சொல்ல முடியாது. கடந்த ஒரே ஆண்டில் மட்டும் உத்தரகண்ட்டில் 2 முறை முதல்வர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதனால், அங்கு பாஜக மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியைப் பெறுவது சந்தேகமே.
உத்தரகண்ட்
இருப்பினும், இதையெல்லாம் தாண்டி பாஜகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் உத்தரகண்ட்டில் முகாமிட்டுள்ளனர். அதன்படி அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பாஜகவுக்கு ஆதரவாக உத்தரகண்ட்டில் பிரசாரம் செய்து வருகிறார். பாகிஸ்தான் எல்லையில் இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆப்ரேஷனுக்கு ஆதாரம் கேட்ட ராகுல் காந்தியை ஹிமந்தா பிஸ்வா சர்மா கடுமையாகத் தாக்கி பேசினார்.
சர்ச்சை பேச்சு
முன்னதாக நேற்றைய தினம் உத்தரகண்ட்டில் பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, "நீங்கள் உண்மையிலேயே ராஜீவ் காந்தியின் மகனா இல்லையா? என்று எங்களாலும் கேட்க முடியும். ராகுல் காந்தி இப்போது பேசும் பேச்சுகள் எல்லாம் 1940களில் முகமது அலி ஜின்னா பேசிய பேச்சுகளைப் போல இருக்கிறது. ஒரு விதத்தில், ராகுல் காந்தி கூட நவீனக் கால ஜின்னா தான்" என்று கூறியிருந்தார். ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த அசாமில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டது.
விளக்கம்
இந்நிலையில், இன்று உத்தரகண்ட்டில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது பேச்சை விளக்க முயன்றார். இன்று பிரசார கூட்டத்தில் பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, "எதிரி நாட்டிற்குள் செல்லும் முன் நமது வீரர்கள் ஒரு மாதத்திற்கு முன்னரே திட்டமிடுவார்கள். இவை நமது ராணுவத்தின் தந்திரமான செயல்கள். இந்த ஆப்ரேஷன் முடிந்த பின்ரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்போது வந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆப்ரேஷனுக்கு ஆதாரம் கேட்டால், அது நமது ராணுவ வீரர்களின் தியாகத்தைச் சந்தேகிக்கும் வகையில் இருக்கும்.
ஜின்னாவின் ஆவி
நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தை அனைவரும் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ட்விட்டர் உட்பட பல தளங்களில் அவர்கள் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்போது அவர்கள் நமது ராணுவத்தில் செயலுக்கு ஆதாரம் கேட்க மாட்டார்கள். நாடாளுமன்றம் உள்ளிட்டவற்றில் ராகுல் காந்தியின் பேச்சைப் பார்க்கும் போது, ஜின்னாவின் ஆவி அவரது உடலில் நுழைந்தது போல் தோன்றுகிறது.
ஜின்னாவின் ஆவி
அவர் இந்தியா என்பது குஜராத் முதல் மேற்கு வங்கம் வரை மட்டுமே என நினைக்கிறார். கடந்த 10 நாட்களாக அவர் சொல்வதை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று ஒருமுறை கூறினார். இன்னொரு முறை இந்தியா என்றால் குஜராத்தில் இருந்து வங்கம் வரை என்கிறார். அதனால், ராகுல் காந்திக்குள் ஜின்னாவின் பேய் புகுந்துவிட்டது என்று தோன்றுகிறது" என்றார்.