லவ் ஜிகாத்திற்கு ஆயுள் தண்டனை.. இந்து- முஸ்லீம் இடையே நிலம் விற்க கட்டுப்பாடு.. பாஜக முதல்வர் பரபர
திஸ்பூர்: நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே அரசு வேலை கொடுக்கும் வகையிலான புதிய சட்டத்தைக் கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இனி அசாம் மாநிலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அங்கே அரசு வேலை கிடைக்கும் சூழல் உருவாகும்.
தமிழகத்தில் வெளி மாநிலத்தவர் வருகை அதிகரிப்பதால் இங்கே மண்ணின் மைந்தர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகார் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் இந்த சிக்கல் இருக்கிறது. இதனால் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் வகையிலான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்
அசாமில் புதிய சட்டம்: இதற்கிடையே அசாமில் அம்மாநில அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அங்கே அசாம் மாநிலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். அசாம் மாநிலத்தில் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், அதைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மியா என்று அழைக்கப்படும் வங்காள மொழி பேசும் வங்கதேச முஸ்லீம்களைப் பழங்குடியினராக அங்கீகரிக்கவும் அவர் சில நிபந்தனைகளை விதிக்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் என்றும் அசாமின் பழங்குடியின மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் என்றும் பாஜக ஆதரவாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
லவ் ஜிகாத்: இது பாஜக ஆளும் மாநிலங்களில் லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டங்கள் கொண்டு வரப்படும் நிலையில், அசாமில் லவ் ஜிகாத் வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தை அசாம் அரசு விரைவில் கொண்டு வரும் என்றும் சர்மா கூறினார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சட்ட விரோதமாக மதமாற்றத் தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் பிறகு சில நாட்களில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இதன் மூலம் லவ் ஜிகாத் விவகாரங்களில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் வழங்க முடியும். ஒரு பெண் அல்லது மைனர் பெண்ணை அச்சுறுத்தி அல்லது ஏமாற்றி திருமணம் செய்து கொள்வது அல்லது திருமணம் செய்வதாக உறுதியளிப்பதை லஜ் ஜிகாத் என இவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நிலம் விற்பனைக்கும் கட்டுப்பாடு: மேலும், இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே நிலம் விற்பனை செய்வது தொடர்பாகவும் அசாம் அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவெடுத்துள்ளதாக அவர் கூறினார். அத்தகைய பரிவர்த்தனையை அரசால் தடுக்க முடியாது என்றாலும், இதற்கு சில ஒப்புதல்கள் தேவை என்று கட்டுப்பாடுகளைக் கொண்டு வர இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications