அசாம் கலவரத்தின் பின்னணி காரணங்கள்...
குவஹாத்தி: அசாம் மாநிலத்தில் போடோ, தீவிரவாத குழுவுக்கும், முஸ்லிம்களுக்கும் காலம் காலமாக தொடர்ந்து வரும் சண்டைக்கு முக்கிய காரணங்கள் ஐந்து உள்ளன.

வங்கதேசத்திலிருந்து வந்து குடியேறியது
போடோ, எனப்படுபவர்கள் அசாமின் பூர்வகுடிமக்கள். ஆதிவாசி (எஸ்.டி) இனத்தை தேர்ந்தவர்கள். ஆனால் அங்குள்ள முஸ்லிம்களில் பெரும்பாலானோர் 1950ம் ஆண்டுக்கு பிறகு வங்கதேசத்தில் இருந்து அசாமில் வந்து குடியேறியவர்கள். இதனால் கல்வி, வேலைவாய்ப்பு, இயற்கை வள பங்கீடு என அனைத்திலும் பூர்வ குடிமக்களுக்கு போட்டி அதிகமானது. இதை விரும்பாததால் 1990களில் போடோ இயக்கம் தலை தூக்கியது.

அரசின் தோல்வி
போடோ மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடுவே இணக்கமான சூழ்நிலையை உருவாக்க அரசுகள் தவறிவிட்டன. 2003ம் ஆண்டு அப்போது மத்தியில் ஆட்சி செய்த, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அசாம் மாநில அரசு இணைந்து போடோ இயக்கத்துடன் செய்துகொண்ட அமைதி ஒப்பந்தம் ஏட்டளவிலேயே உள்ளது. அதை செயல்வடுத்த பின்னர் வந்த அரசுகள் முயற்சி எடுக்கவில்லை.

குடியேற்றத்தை நிறுத்தவில்லை
சட்டவிரோத வங்கதேசத்தவர்களின் குடியேற்றத்தை இதுவரை தடுத்து நிறுத்த அரசு முயலவில்லை. அசாமிலுளள்ள முஸ்லிம்கள் வங்கதேசத்தினரின் ஊருடுவலுக்கு ஆதரவு அளிப்பதாக போடோ மக்கள் நினைக்கிறார்கள். இதனால் மேற்கு வங்கத்தில் இருந்து வந்து குடியேறிய முஸ்லிம்களும் போடோக்களுக்கு எதிரிகளாகவே தெரிகிறார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்களில் இரு்நது போடோ இனத்தவர்களும், போடோ இனத்தவர் அதிகமாக உள்ள இடங்களில் இருந்து முஸ்லிம்களும் பெட்டி படுக்கையுடன் வெளியேறுவது தொடர்கதையாகிவிட்டது.

ஆயுதங்கள் கிடைப்பது
போடோ தீவிரவாத குழுக்களுக்கு ஆயுத சப்ளை எளிதில் சென்றடைகிறது. அவர்கள் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் கையிலிருப்பதால் அவர்கள் தாக்குதலின் வீரியம் அதிகமாக உள்ளது. இதனால் கொத்து கொத்தாக எதிராளிகள் கொல்லப்படுகிறார்கள். இது பதற்றத்தை அதிகப்படுத்தி அமைதியை எட்டச் செய்வதில்லை.

குழுக்கள் உடைந்தது
போடோக்கள் ஒரே தலைமையின்கீ்ழ் இயங்காமல் பிளவுபட்டு காணப்படுகிறார்கள். ஒரு குழு அமைதி பேச்சுவார்த்தை நடத்தும்போதே மற்றொரு குழு தாக்குதலை நடத்துகிறது. இதனால் அமைதியை எட்டச் செய்ய எடுக்கும் அரசின் முயற்சிகள் பலனளிக்காமல் போய்விடுகின்றன. இந்த ஐந்து காரணங்களும்தான் அசாமில் ரத்த ஆறு ஒட காரணங்களாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications