மணிப்பூர் தேர்தல் : ரூ4,800 கோடி மதிப்பிலான 22 திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!
இம்பால்:மணிப்பூர் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரூ4,800 கோடி மதிப்பிலான 22 திட்டங்களை பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
மணிப்பூர் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது.
மணிப்பூரில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. மணிப்பூர் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்க தீவிரம் காட்டுகிறது. அண்மையில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா மணிப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

இரும்பு பாலம் திறப்பு
இதனைத் தொடர்ந்து இன்று பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்தில் ரூ4,800 கோடி மதிப்பிலான 22 திட்டங்களை அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைத்து தேர்தல் பிரசாரம் செய்தார். ரூ.1850 கோடி மதிப்பிலான 13 திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.2950 கோடி மதிப்பிலான 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. சாலை கட்டமைப்பு, குடிநீர், சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி , தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, கலை மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இத்திட்டங்கள் அடங்கும். ரூ.1700 கோடி மதிப்பிலான ஐந்து தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் 110 கி.மீ தூரத்துக்கு செயல்படுத்தப்படும். சில்சார்-இம்பால் இடையே போக்குவரத்து நெரிசலைக்குறைக்கும் வகையிலான, பாரக் ஆற்றின் குறுக்கே ரூ.75 கோடி செலவில் கட்டப்பட்ட இரும்பு பாலத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

2350 மொபைல் கோபுரங்கள் அர்ப்பணிப்பு
சுமார் ரூ.1100 கோடி செலவில் கட்டப்பட்ட 2350-க்கும் மேற்பட்ட மொபைல் கோபுரங்களை பிரதமர் மோடி மணிப்பூர் மக்களுக்கு அர்ப்பணித்தார். இது மாநிலத்தில் கைபேசி இணைப்புகள் எண்ணிக்கையை பெருமளவில் அதிகரிக்கும். மணிப்பூர் மாநிலத்தில் சுகாதாரத்துறையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இம்பாலில் ரூ.160 கோடி மதிப்பில் தனியார், பொதுத்துறை கூட்டு முயற்சியில் உருவாக்கப்படவுள்ள நவீன புற்றுநோய் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கியாம்சியில், புதிதாக கட்டப்பட்ட 200 படுக்கைகள் கோவிட் மருத்துவமனை தொடங்கி வைக்கப்பட்டது. இது டிஆர்டிஓ ஒத்துழைப்புடன் ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இம்பால் நகர திட்டங்கள்
இம்பால் பொலிவுறு நகரம் திட்டத்தில் பல்வேறு திட்டங்கள் முடிவடையவுள்ளன. இதில் ரூ.170 கோடி செலவிலான மூன்று திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். புதிய கண்டுபிடிப்பு, புத்தாக்கம், பயிற்சி குறித்த மணிப்பூரின் மிகப்பெரிய முன்முயற்சிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இது மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும்.

குர்கானில் மணிப்பூர் கலைத்திறன் நிறுவனம்
ஹரியானாவின் குர்கானில், மணிப்பூர் கலைத்திறன்கள் நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஹரியானாவில் மணிப்பூர் கலைத்திறன் நிறுவனத்தை அமைக்கும் எண்ணம் 1990-ல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த சிந்தனை பல ஆண்டுகளாக செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தின் பாரம்பரிய வளம் மிக்க கலைகளை ஊக்குவிக்கும் ரூ.240 கோடி மதிப்பிலான இந்நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இம்பாலில் புதுப்பிக்கப்பட்ட கோவிந்தாஜி கோயிலைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, மொய்ராங்கில் ஐஎன்ஏ வளாகத்தையும் தொடங்கி வைத்தார். பிரதம மந்திரி ஜன் விகாஸ் கார்யகிரமத்தின் கீழ், ரூ.130 கோடி மதிப்பிலான 72 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். மாநிலத்தில் கைத்தறி நெசவை ஊக்குவிக்கும் ரூ.36 கோடி மதிப்பிலான இரண்டு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.












Click it and Unblock the Notifications