ஒரே நேரத்தில் லோக்சபா, சட்டசபை தேர்தல்கள்- மாநில கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறது மத்திய அரசு!!
டெல்லி: லோக்சபா, சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலும், மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்களும் வெவ்வேறு சமயங்களில் நடத்தப்படுகின்றன. ஒரு சில நேரங்களில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சில மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.
இப்படி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் லோக்சபா, சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தினால் செலவு பெருமளவில் குறையும்; அதன் பின்னரும் தேர்தல்களையும் ஒரே நேரத்து நடத்துவதும் எளிதாக இருக்கும் என்பதும் நீண்டகாலமாக முன்வைக்கப்படும் யோசனைகள்.
இந்த நிலையில் டெல்லியில் சட்டம், நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் லோக்சபா தேர்தல், மாநில சட்டசபைகளுக்கான தேர்தல். நகரசபை, பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆராய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநிலக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினர்கள் வரும் 15-ந் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சென்று திரிணாமுல் காங்கிரஸ், பார்வர்டு பிளாக் மற்றும் பிற சிறிய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.
இதன் பின்னர் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மாநிலக் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்; இதன் பின்னர் தேசியக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.