ஒருதலைக்காதலால் மாணவியை கத்தியால் குத்தி ஆட்டோ டிரைவர் தற்கொலை
திருவனந்தபுரம்: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர் தானும் விஷம் குடித்து இறந்தார்.
திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் மாவிளை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் என்ற ஆட்டோ டிரைவர்.
அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தினமும் அவரது ஆட்டோ நிறுத்தம் வழியாக கல்லூரிக்கு நடந்து செல்வது வழக்கம். அந்த மாணவி மீது ரஞ்சித்துக்கு ஒருதலை காதல் ஏற்பட்டது. இதனால் அவர் அந்த மாணவியை பின் தொடர்ந்து சென்று தனது காதலை தெரிவித்தார். ஆனால் அந்த மாணவி காதலை ஏற்க மறுத்து விட்டார்.
இதனால் ரஞ்சித்துக்கு அந்த மாணவி மீது ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று அந்த மாணவி கல்லூரிக்கு சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த ரஞ்சித் அவரை வழி மறித்து தகராறு செய்தார். பிறகு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை குத்தினார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ரஞ்சித்தை மடக்கிப்பிடிக்க முயன்றனர்.
உடனே ரஞ்சித் தனது மோட்டார் சைக்கிளில் ஏறி வேகமாக சென்றார். இதில் அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை காப்பாற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் ரஞ்சித்தின் வாயில் இருந்து நுரை தள்ளி இருந்தது. இதனால் அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் விஷம் குடித்திருந்ததும் விஷத்தின் தாக்கம் காரணமாக அவர் இறந்தததும் தெரிய வந்தது.
ரஞ்சித்தின் பாக்கெட்டிலும் சில விஷ மாத்திரைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர் விஷம் குடித்து விட்டு வந்து காதலியை கொல்ல முயன்ற போது பலியாகி விட்டது தெரிய வந்தது.
ரஞ்சித்தால் கத்தியால் குத்தப்பட்ட அந்த மாணவிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி போலீசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.