பெங்களூரில் பெண்ணிடம் ரூ.10,000 ரொக்கத்தை பறித்துக் கொண்டு ஓடிய ஆட்டோ டிரைவர்
கர்நாடக குடியிருப்பு வாரியத்தின் மேற்பார்வையாளர் சுமித்ரா தேவி(56). அவர் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள மைசூர் வங்கி சர்க்கிளில் உள்ள காவேரி பவனில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு ஆட்டோவில் சென்றார். மகளின் வீட்டில் தங்கியிருக்கும் அவர் காலை 8 மணிக்கு மாதவன் பூங்கா அருகே ஆட்டோவில் ஏறினார்.
குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவுடன் அவர் 5 ரூ. 100 நோட்டுகளை ஆட்டோ டிரைவரிடம் கொடுத்துள்ளார். அதற்கு அவரோ முழு ரூ.500 நோட்டு தரும்படி சுமித்ராவிடம் கேட்டுள்ளார். சுமித்ராவும் தனது கைப்பையில் இருந்த ரூ.10,000 கட்டில் இருந்து பணத்தை எடுக்க முயன்றார். அதை கண்ணாடி வழியாக பார்த்த டிரைவர் ஆட்டோவை நிறுத்தி கைப்பையை பறித்துள்ளார்.
இது குறித்து சுமித்ரா கூறுகையில்,
நான் எனது கைப்பையை ஆட்டோ டிரைவரிடம் இருந்து வாங்க போராடினேன். அப்போது அவர் ஆட்டோவை இரண்டு வாகனங்களுக்கு இடையே நிறுத்தி எனது பணம் தெருவில் கிடப்பதாக தெரிவித்தார். என்னை கீழே இறங்க வைத்து தப்பிக்கலாம் என்று அவர் நினைத்தார். நான் ஆட்டோவில் இருந்து இறங்காததால் என்னை கீழே தள்ளிவிட்டார். இதில் எனக்கு காலில் அடிபட்டது. அப்போது அந்த வழியாக சென்ற முதியவரிடம் உதவி கேட்டேன். அவர் கண்டுகொள்ளவே இல்லை.
அந்த ஆட்டோவின் பதிவு எண் கேஏ-01-2512 ஆகும். இனி நான் ஆட்டோவிலே செல்லவே மாட்டேன் என்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பதிவு எண் ஒரு சரக்கு ஆட்டோவுடையது என்பது தெரிய வந்துள்ளது.
முன்னதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் ஆட்டோவில் சென்ற 2 சகோதரிகளிடம் டிரைவர் நடுரோட்டில் தகாத முறையில் நடந்து கொண்டார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை பலர் பார்த்தபோதிலும் யாரும் உதவிக்கு வரவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தட்ஸ்தமிழ் ஊழியரான சதீஷ் குமார் அதிகாலையில் ஆட்டோவில் சென்றபோது அவரை தாக்கிவிட்டு அவரிடம் இருந்து ரூ.10,000 ரொக்கத்தை ஆட்டோ டிரைவர் பறித்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.