ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை
அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை மொத்தம் 30 கோடி ரூபாய் நிதி வந்துள்ளதாக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வசூலாகியுள்ள நிதி குறித்த விவரங்களை ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பகவான் ராமர் பிறந்த இடமாக பக்தர்களால் போற்றப்படும் ராமஜென்ம பூமியில் இன்று பூமி பூஜை விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அயோத்தி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவில் கட்டுமானப்பணிக்காக பல லட்சம் செங்கற்கள், கற்தூண்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.
பல ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு ராமர் கோவில் கட்டுவதற்காக உச்சநீதிமன்றத்தில் அனுமதி கிடைத்த உடன் படுவேகமாக வேலைகள் நடைபெற்றன. ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை அமைக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்த கோவில் கட்டுமானப்பணிக்காக பலரும் நிதி அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். தங்கம், வெள்ளி என கிலோ கணக்கில் அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை வசூலான நிதி விபரங்களை ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.
தெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை
இதுகுறித்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை மொத்தம் 30 கோடி ரூபாய் நிதி வந்துள்ளது. பூமி பூஜை நடைபெறும் நாளான்று 11 கோடி ரூபாய் வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார். இது தவிர வெளிநாடுகளில் இருந்து 7 கோடி ரூபாய் பணம் வரவுள்ளது. ஆனால் அதனை நிறுத்தி வைத்துள்ளோம். அந்த பணத்தை பெறவில்லை. எங்கள் அறக்கட்டளை வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதற்கான அனுமதியை முழுமையாக பெறவில்லை. அனுமதி பெறப்பட்டவுடன் அந்த பணத்தை பெற்றுக் கொள்வோம் என்றும் கூறியுள்ளார் கிரி.