முன்மாதிரி கிராமமாக திகழும் தண்ணீர்முக்கோம்... வண்ண வண்ண குடைகளுடன் உலா வரும் மக்கள்
ஆலப்புழா: கேரள மாநில ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள தண்ணீர்முக்கோம் கிராமத்தில், சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் பொதுமக்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகமே குடைகளை விநியோகித்து வருகிறது.
கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் சில மாதங்கள் நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எவ்வாறு பொதுவிடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க முடியும் என்றும், அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் ஒரு தரப்பினர் கூறி வந்தனர்.
இந்நிலையில் சமூக விலகலை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளது தண்ணீர்முக்கோம் கிராமம். பொதுவிடங்களுக்கு செல்லும் மக்கள் பெரியளவிலான குடைகளை விரித்து பிடித்தவாறு செல்ல வேண்டும் என்றும், இதற்காக கிராம பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் 10,000-க்கும் மேற்பட்ட குடைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு குடையின் விலை ரூ.150 என்றால் அதற்கான தொகையை மாதம் ரூ.10 என்ற வீதம் 15 மாதங்களுக்கு செலுத்திக்கொள்ளலாம் என்றும், ஒருவருக்கு ஒருவர் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியை பொதுமக்கள் பேண வேண்டும் என்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் எனக் கூறுகிறார் தண்ணீர்முக்கோம் கிராம பஞ்சாயத்து தலைவி ஜோதி. குடும்பஸ்ரீ சுய உதவிக் குழுக்கள் இப்போது குடை தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளதால் அவர்களிடம் இருந்து கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகிக்க உள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே இந்த கிராம பஞ்சாயத்தை முன்மாதிரி முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் ஒரு குடை ஒன்றுக்கு அதன் விலையில் 20 % மானியத்தை அரசே அளிக்கிறது. இதனால் ஆலப்புழா மாவட்டத்தில் தண்ணீர்முக்கோம் கிராமமக்கள் வண்ண வண்ண குடைகளுடன் தெருக்களில் உலா வருகின்றனர்.
இந்த மக்களின் புதுமையான முயற்சிக்கு மருத்துவ வல்லுநர்களும், ஆனந்த் மகேந்திரா போன்ற பல தொழிலதிபர்களும் பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.