இந்துக்கள் இல்லை எனில் இந்தியா இல்லை… ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
போபால்: இந்துக்கள் இல்லை எனில் இந்தியா இல்லை எனவும், இந்தியா இல்லாமல் இந்துக்கள் இல்லை எனவும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராக மோகன் பகவத் பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். குறிப்பாக இந்துத்துவா குறித்தும் இந்து மக்களிடையே ஒற்றுமை இல்லை எனவும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் கூடியிருந்த தொண்டர்கள் இடையே உரையாற்றிய அவர், சுதந்திரத்தின் போது இந்தியா உடைந்து பாகிஸ்தான் நாடு என்ற நாடு உருவாக்கப்பட்டது எனவும் , தேசப் பிரிவினையின் போதும் பிரிவினைக்கு பின்னரும் இந்தியா பாதிக்கப்பட்டதை யாரும் மறந்து விடக் கூடாது எனவும், இந்த பிரிவினை நடக்காமல் இருந்திருந்தால் அந்த வலி போயிருக்கும் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்துக்களின் வலிமையும் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்றும், இந்து என்ற உணர்வும் இந்துக்களிடையே குறைந்து வருவதாகவும் கூறினார்.
#WATCH | "You will see that the number & strength of Hindus have decreased...or the emotion of Hindutva has decreased....If Hindus want to stay as Hindu then Bharat needs to become 'Akand'," says RSS chief Mohan Bhagwat while addressing an event in Gwalior, MP pic.twitter.com/hkjkB5xMz1
— ANI (@ANI) November 27, 2021
மேலும் இந்துக்கள் தங்களை இந்துவாக இருக்க வேண்டுமென்றால் பாரதம் அகண்ட பாரதமாக இருக்க வேண்டும் என தெரிவித்த மோகன்பகவத், இந்துக்கள் இல்லாமல் இந்தியா கிடையாது எனவும், இந்தியா இல்லாமல் இந்துக்களும் இல்லை என கூறினார். இந்தியாவையும் இந்துக்களையும் பிரிக்க முடியாது எனக் கூறிய அவர் சுயமாக நிற்பதுதான் இந்துத்துவாவின் சாரம்சம் என்றும், இந்தக் காரணத்துக்காகத்தான் இந்தியா இந்துக்களின் தேசமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.