பயிற்சிக் கட்டணம் செலுத்த.. போதைப் பொருள் கடத்தி போலீசில் சிக்கிய பி.எட். பட்டதாரிப் பெண்
அரசு வேலைக்கான பயிற்சிக் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் போதைப் பொருள் கடத்திய பெண் ஒருவர், 2 பேருடன் போலீசில் சிக்கியுள்ளார். இது ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செகந்திராபாத்: அரசு வேலைக்கான தேர்வு எழுதத் தனியார் நிறுவனங்கள் பயிற்சிகளை அளித்து வருகின்றன. இதில் சேர்ந்து படிக்க விரும்பிய பெண் ஒருவர், அதற்கான கட்டணத்தைச் செலுத்த 100 கிலோ போதைப் பொருள் கடத்த முயன்ற போது, போலீசில் சிக்கினார்.
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் 25 வயதான பபிதா. இவருக்கு கணேஷ் என்பவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் திருமணமான ஒரு மாதத்திற்குள் அவரது கணவர் அவரை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணுடன் சென்றுவிட்டார்.
இதனால் பபிதா வாழ்க்கையில் பெரும் சோகம் ஏற்பட்டது. தான் பி.எட். பட்டதாரி என்பதால் எப்படியாவது ஒரு அரசு வேலையைப் பெற்று கவுரவமாக வாழ்ந்துவிட வேண்டும் என்று பபிதா கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டார்.
முயற்சி
அதன் தொடர்ச்சியாய் அவர், தான் படித்தப் பிடிப்பிற்கு ஏற்ப அரசுப் பள்ளியில் வேலைப் பெற விரும்பினார். அதனைப் பெற அரசு நடத்தும் நுழைவுத் தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும். இதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டார்.
பயிற்சி
தனியார் பயிற்சிப் பள்ளிக்குச் சென்று பயிற்சி பெற நினைத்த அவரிடம் கையில் துளியளவும் பணம் இல்லை. பணத்தைத் திரட்டுவதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்ட பபிதாவிற்கு எப்படியோ ஒரு கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
கடத்தல்
அந்தக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த திட்டத்தின் படி, பபிதா, தனது உறவினர் 20 வயதான சுனில் குமார் மற்றும் 25 வயதான பிட்யசாகர் சிங் ஆகியோருடன் இணைந்து, 100 கிலோ போதைப் பொருளை எடுத்துக் கொண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் கடத்த முயற்சி செய்தார்.
சிக்கினர்
சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை எடுத்துக் கொண்டு விசாகப்பட்டினத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூருக்கு ரயிலில் இவர்கள் மூவரும் கிளம்பினர். ரயில் செகந்திராபாத் ரயில் நிலையம் வந்த போது போலீசிடம் மூவரும் சிக்கினர்.
வெறும் ரூ.5000
கையும் களவுமாக பிடிபட்ட மூவரும், போலீசாரிடம் பிடிபட்ட போது, தன் படிப்பிற்காக இப்படிச் செய்ததாக பபிதா கூறியுள்ளார். மேலும், இந்த வேலையைச் செய்து முடிக்க மூவருக்கும் தலா 5000 ரூபாய் தர கடத்தல் கும்பல் கூறியுள்ளதையும் அவர்கள் தெரிவித்தனர்.
விசாரணை
இதனை நம்பி இந்தச் செயலில் ஈடுபட்ட மூவரும் போலீசில் சிக்கியது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.