அன்னை தெரசா அறக்கட்டளையின் குழந்தைகள் காப்பகங்களில் ரெய்டு நடத்த மத்திய அரசு அதிரடி உத்தரவு
நாடு முழுவதும் அன்னை தெரசா அறக்கட்டளையின் குழந்தைகள் காப்பகங்களில் சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
டெல்லி: அன்னை தெரசா மிஷனரி அறக்கட்டளையின் குழந்தைகள் காப்பகங்களில் சோதனைகளை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அண்மையில் அன்னை தெரசா மிஷனரி அறக்கட்டளையின் காப்பகத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாக கன்னியாஸ்திரி ஒருவர் கைது செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் 22 குழந்தைகள் மீட்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநில அரசின் குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு காப்பகங்கள் சீல் வைக்கப்பட்டன. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, அன்னை தெரசா மிஷனரி அறக்கட்டளைக்கு சொந்தமான குழந்தைகள் காப்பகங்களில் சோதனைகள் நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த காப்பகங்கள் அனைத்தையும் மத்திய தத்தெடுப்பு ஆணையத்தின் கீழ் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும் நாடு முழுவதும் 2,300 காப்பகங்கள் இந்த மத்திய தத்தெடுப்பு ஆணையத்தின் கீழ் பதிவு செய்யாதது சரியானது அல்ல எனவும் அதிருப்தியை மேனகா காந்தி வெளிப்படுத்தினார். நாடு முழுவதும் காப்பகங்களில் 2,32,937 குழந்தைகள் இருப்பதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.