500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளாத கூறி சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கால அவகாசம் எதுவும் அளிக்காமல் திடீரென நள்ளிரவு முதலே இந்த நடைமுறை அமலுக்கு வந்ததால், நாடு முழுவதும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். இந்த அறிவிப்புக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சங்கம்லால் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. அதனை செயல்படுத்த கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும். எனவே, எனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இதே கோரிக்கையை வலியுறுத்தி மும்பை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு பொது நல மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications