சென்னை வெள்ளம்.. பெங்களூர் மாநகராட்சி ரூ.3 கோடி நிவாரணம்
பெங்களூர்: சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெங்களூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒரு மாத ஊதியத்தையும், துப்புரவு உள்ளிட்ட அனைத்துவகை பணிகளிலுமுள்ள மாநகராட்சி ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தையும் அளிக்க முன்வந்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் மஞ்சுநாத் ரெட்டி கூறுகையில், நாட்டின் பல பகுதிகளிலும், இயற்கை பேரிடர்கள் ஏற்பட்ட காலங்களில் பெங்களூர் மாநகராட்சி சார்பில் உதவிகள் செய்யப்பட்டுள்ளன. அதே வகையில், தற்போது சென்னைக்கும் உதவ முன்வந்துள்ளோம்.

பெங்களூர் மாநகராட்சியிலுள்ள 198 வார்டு கவுன்சிலர்களும், தங்களது ஒரு மாத ஊதியத்தை, சென்னை வெள்ள நிவாரணத்துக்கு, அளிக்க முடிவு செய்துள்ளோம். அதுபோல, மாநகராட்சியின் 8 மண்டலங்களிலும் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துவகை ஊழியர்களும் தங்களது ஒருநாள் சம்பளத்தை சென்னை நிவாரணத்துக்கு அளிக்க முன்வந்துள்ளனர்.
இக்கணக்குப்படி மொத்தத்தில், ரூ.2.5 கோடி வசூலாகும். அதை நாங்கள் வேறு நிதிகளில் இருந்து கூடுதலாக ரூ.50 லட்சத்தை எடுத்து, 3 கோடியாக உயர்த்தி, சென்னைக்கு அளிக்க உள்ளோம். முதல்வர் சித்தராமையா, இந்த நிதியை தமிழக அரசிடம் கொடுப்பார், அல்லது, கவுன்சிலர்கள் குழு சென்னை சென்று நிதியை அளிக்கும். இவ்வாறு மேயர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications