'சென்னையில் ஒரு நாள்' பாணியில் பெங்களூரில் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட இதயம்
பெங்களூர்: பெங்களூர் பன்னர்கட்டா ரோட்டில் உள்ள சாகர் மருத்துவமனையில் இருந்து ஓசூர் ரோட்டில் உள்ள நாராயண ஹ்ருதாலயாவுக்கு இதயம் ஒன்று எடுத்துச் செல்லப்பட்டது. இதற்காக ஆம்புலன்ஸ் சென்ற சாலையில் போலீசார் போக்குவரத்து இன்றி பார்த்துக் கொண்டனர்.
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள மாண்டியா மாவட்டத்தில் இருக்கும் ஆதல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேத்தன்(22). அவர் பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள கார்மென்ட் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 15ம் தேதி அவர் வேலை செய்கையில் இயந்திரத்தில் சிக்கி அவரின் முதுகெலும்பில் படுகாயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இரண்டு நாட்கள் கழித்து மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது தந்தை ராமண்ணா முடிவு செய்தார். சேத்தனின் இதயம் ஓசூர் ரோட்டில் உள்ள நாராயண ஹ்ருதாலயாவில் சிகிச்சை பெறும் பாட்னாவைச் சேர்ந்த 63 வயது வழக்கறிஞர் அரவிந்த் சின்ஹாவுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தை பன்னர்கட்டா ரோட்டில் உள்ள சாகர் மருத்துவமனையில் இருந்து நாராயண ஹ்ருதாலயாவுக்கு ஆம்புலன்ஸ் மூலம் நேற்று கொண்டு சென்றனர்.
ஆம்புலன்ஸை 39 வயது கோபாலன் என்பவர் ஓட்டினார். ஆம்புலன்ஸ் சென்ற பாதை முழுவதும் போக்குவரத்து இன்றி போலீசார் பார்த்துக் கொண்டனர். இதனால் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன பெங்களூரில் ஆம்புலன்ஸ் 23 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 20 நிமிடங்களுக்குள் கடந்து சென்றுள்ளது.
சேத்தனின் சிறுநீரகங்கள், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளும் தானம் செய்யப்பட்டது.