கிரைம் குறைக்க அதிரடி.. பெங்களூர் நகர மக்களை நடமாடும் 'சிசிடிவிக்களாக' மாற்றும் காவல்துறை!
பெங்களூர்: மக்களின் ஒவ்வொருவரையும், ரகசிய கேமராக்களாக மாற்றப்போகிறது பெங்களூர் காவல்துறை. குற்றச்சம்பவங்களை நேரடி ஒளிபரப்பாக பார்க்க இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.
இந்த மார்டன் உலகில், ரோட்டில் யாருக்காவது ஆபத்து என்றாலும், காப்பாற்ற செல்லாமல் அதை போட்டோ அல்லது வீடியோ எடுத்துக்கொண்டிருப்பவர்கள் அதிகரித்துவிட்டனர். இந்த குறையை, நிறையாக மாற்றுகின்றனர் பெங்களூர் போலீசார். ஆம்.. நீங்கள் செய்ய வேண்டியது சிம்பிள். இனிமேல் செல்போன் கேமராவில் வீடியோ எடுக்காதீர்கள், பெரிஸ்கோப் கேமராவில் வீடியோ எடுங்கள். உங்களுக்கும் திருப்தி, உதவி தேவைப்படுவோருக்கும் உதவி கிடைக்கும் என்கிறது காவல்துறை.
நவீன தொழில்நுட்பங்கள்
இந்தியாவின் சிலிக்கான்வேலி என்ற புகழ்மொழிக்கு ஏற்பவே, தொழில்நுட்பங்களை பெருமளவில் ஆட்சி, அதிகாரத்தில் பயன்படுத்தி வருகின்றனர் பெங்களூர் மாநகர போலீசார். டிவிட்டர் மூலம் பொதுமக்களுடன் தொடர்பு வைத்து குற்றங்களை குறைப்பதில் நகர காவல்துறை பிற மாநகர காவல்துறைகளுக்கு முன் உதாரணம்.
டிவிட்டர் கிங்
பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டிக்கு சுமார் 3 லட்சம் பாலோவர்கள் உள்ளனர். இது கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களின் முதல்வர்கள் டிவிட்டர் பாலாோவர்களை விடவும் மிக அதிகம். நகரில் எங்காவது குற்றங்கள் நடந்தால், தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், பெங்களூர் குடிமக்கள், டிவிட்டரிலேயே கமிஷனரை அணுக முடியும்.
நல்ல பலன்
கமிஷனர் மட்டுமின்றி இணை மற்றும் கூடுதல் கமிஷனர்கள், துணை மற்றும் உதவி கமிஷனர்களும் டிவிட்டரில் இணைந்து பொதுமக்களின் குறைகளை அறிந்து உடனடியாக தீர்த்து வைக்கிறார்கள். டிவிட்டரில் வரும் புகார்கள் போலியாக இருப்பதில்லை என்பதால், நம்பகத்தன்மையும் பாதுகாக்கப்படுகிறது.
லைவ் காட்சிகள்
இந்நிலையில்தான், டெக்ஸ்ட் மெசேஜ்கள் மட்டும் போதாது, நேரடியாக காட்சிகளையும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது மாநகர காவல்துறை. இதுகுறித்து எம்.என்.ரெட்டி கூறியது: டிவிட்டர் நிறுவனத்தின் செல்போன் அப்ளிகேஷனான பெரிஸ்கோப் (Periscope) லைவ் வீடியோக்களுக்கானது. இதில் வீடியோவை லைவாக பிறருக்கு ஷேர் செய்ய முடியும். இந்த அப்ளிகேஷன் உதவியோடு நகரில் குற்றச் செயல்களை கண்டறிய திட்டமிட்டுள்ளோம்.
லைவ் பிரஸ் மீட்
இனிவரும் காலங்களில், பெங்களூர் போலீசார் நடத்தும், செய்தியாளர் சந்திப்புகள், பெரிஸ்கோப் வழியாக லைவாக காண்பிக்கப்படும். இதை பார்த்தபடியே, மக்கள் தங்கள் கருத்துக்களை வீடியோவின் அருகிலேயே பதிவு செய்ய முடியும். மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் அறிந்துகொள்ள இது வசதியாக இருக்கும். அதேபோல பொதுமக்களும், எங்களுக்கு வீடியோ மூலம் தகவல் அனுப்ப முடியும்.
எப்படி செய்யலாம்?
உதாரணத்துக்கு, சிக்னலில் யாராவது ரெட் லைட்டை மதிக்காமல் ஜம்ப் செய்தால், இந்த அப்ளிகேஷனை வைத்து வீடியோ எடுத்தால், நேரடியாக காவல்துறையால் அதை பார்க்க முடியும். அந்த வீடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்து, அப்பகுதி போலீசாருக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் பறக்கும். குற்றம் செய்தவர் அதே இடத்தில் பிடிபடுவார். இவ்வாறு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி தெரிவித்தார். பெங்களூரில் இனிமேல் பொதுமக்களும் நடமாடும் சிசிடிவி கேமராக்களாக போகிறார்கள் என்பது மட்டும் உறுதி.