சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா மனு தள்ளுபடி: இன்று இறுதி வாதம் துவக்கம்
பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, இறுதி வாதத்தை இன்று துவங்கவும் உத்தரவிட்டார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய குற்றம்சாட்டப்பட்ட பிறர் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இவ்வழக்கில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் எழுத்துப்பூர்வமாக இறுதிவாதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதைப் படித்து பார்க்க கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் இருந்து தங்கள் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவும் நிலுவையிலுள்ளது. எனவே இறுதி வாதத்தை தொடங்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சிறப்புநீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, மனுவை தள்ளுபடி செய்ததோடு, சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதி வாதத்தை இன்று தொடங்க வேண்டும் என்றும் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டார். அரசு வக்கீல் தனது வாதத்தை முடித்த நிலையில், திமுகவின் அன்பழகன் தரப்பு, காலத்தை மிச்சம்பிடிக்க வேண்டி தங்கள் வாதத்தை எழுத்து பூர்வமாக நீதிபதியிடம் சமர்ப்பித்துவிட்டது.
இதற்கு முன்பாக, தனியார் நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இதன் மீது விசாரணை நடத்திய ஐகோர்ட் நீதிபதி நாராயணசாமி தனது உத்தரவில், "இந்த வழக்கில் பல சந்தர்ப்பங்களில் உண்மையை மறைத்து விசாரணையைத் திசைதிருப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. வழக்கைத் தாமதப்படுத்தும் நோக்கத்தில் பிரதிவாதிகள் செயல்படும்போது அதை எதிர்த்து மனு தாக்கல் செய்யாமல், குற்றவாளிகளுக்கு ஆதரவாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் செயல்படுவதாகத் தெரிகிறது. இது சரியானதல்ல. இது கண்டனத்துக்கு உரியது. உண்மையை மறைக்கும் முயற்சியும் குற்றமே. நீதிமன்றத்தை ஏமாற்றுபவர்கள் மீது என்ன நடவடிக்கை என்பது தீர்ப்பின்போது பிரதிபலிக்கும்'' என்று கூறியதோடு, விசாரணைக்கு தடை கோரும் மனுவை தள்ளுபடி செய்திருந்தார்.
சிறப்பு நீதிமன்றம் மட்டுமல்ல, உயர்நீதிமன்றமும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு இழுத்தடிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications