காலையில் பதட்டம்.. பிற்பகலுக்கு மேல் வெடித்துக் கிளம்பிய வன்முறை.. பந்தாடப்பட்ட பெங்களூரு #bangaluru
பெங்களூரு: காலை முதல் சற்று முன் வரை பெங்களூரை பெரிய அளவில் பீதிக்குள்ளாக்கி விட்டார்கள் கர்நாடக வன்முறையாளர்கள். திரும்பிய பக்கமெல்லாம் தாக்குதல் நடத்தி மக்களை சொல்லொணாத் துயரத்துக்குள்ளாக்கி விட்டார். "கார்டன் சிட்டி" சில மணி நேரம் வன்முறையாளர்களிடம் சிக்கி தடுமாறிப் போய் விட்டது.
தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் சரமாரியாக தாக்குதலுக்குள்ளாகின. தீவைத்து எரிக்கப்பட்டன. லாரிகள் தாக்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தாக்குதலுக்குள்ளாகின. பூர்விகா மொபைல் நிறுவன விற்பனை மையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அடையாறு ஆனந்த பவனையும் வன்முறையாளர்கள் விடவில்லை.
மிகப் பெரிய அளவில் வன்முறை வெடித்ததால் மக்கள் பெரும் பீதிக்குள்ளாகி விட்டனர். பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் குழந்தைகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர். பெற்றோர்களோ, பிள்ளைகளை பத்திரமாக அழைத்துச் செல்ல வேண்டுமே என்ற பரிதவிப்பில் அலுவலகங்களிலிருந்து அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டன. பயணிகள் பாதியில் இறக்கி விடப்பட்டனர். போராட்டாக்காரர்களிடம் சிக்கி நகரின் பெரும்பாலான பகுதிகள் சிதறுண்டு போயின. வாகனப் போக்குவரத்து பல இடங்களில் ஸ்தம்பித்துப் போனது.
நிலைமை மோசமாவதைப் பார்த்த பெங்களூர் போலீஸ் கமிஷனர் 144 தடை உத்தரவு பிறப்புக்கும் உத்தரவை பிறப்பித்த நிலையில் அதை முதல்வர் சித்தராமையா அவசரமாக தலையிட்டு தடுத்து நிறுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகின.
நகர் முழுவதும் தற்போது அமைதி திரும்பி விட்டதாக காவல்துறை கூறியுள்ளது. போலீஸார் பாதுகாப்புக்காக பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் வன்முறையும், தாக்குதலும் முழுமையாக நின்றதாக தெரியவில்லை. ஆங்காங்கு கடைகளை அடித்து நொறுக்குவதாகவே தகவல்கள் வருகின்றன.
பல அலுவலகங்களில் ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்கூட்டியே வெளியேறிப் போய் விட்டனர். மொத்தத்தில் சில மணி நேரங்களில் பெங்களூர் நகரையே சின்னாபின்னப்படுத்தி விட்டது வன்முறையாளர்களின் அர்த்தமற்ற வெறித்தனம்.