இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக எப்படி நுழைவது? வீடியோ போட்டு விளக்கி.. சர்ச்சையில் வங்கதேச யூடியூபர்
தாக்கா: பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைவது எப்படி என்று வீடியோ வெளியிட்டுள்ள வங்கதேச யூடியூபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற வசனத்தைப் போல, யூடியூபர்கள் என்றால் சர்ச்சைகள் சர்வ சாதாரணமாகிவிட்டன. வியூஸ்க்காக, ஆர்வக் கோளாறில் பின் விளைவுகளை யோசிக்காமல் சர்ச்சைக்குரிய கன்டென்டுகளை ரிலீஸ் செய்து சிக்கிக் கொள்கிறார்கள். அந்த வகையில் வங்கதேச நாட்டில், DH Travelling Info என்ற சேனலை நடத்தும் யூடியூபர் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் வங்கதேச நாட்டின் சுனம்காங் மாவட்டத்தில் நின்று கொண்டிருக்கிறார். அந்தப் பகுதிதான் இந்தியாவுக்கான எல்லையாகவும் உள்ளது. இதையடுத்து அவர் வீடியோவில் இந்தியாவுக்கு செல்லும் சாலையை காண்பிக்கிறார். மேலும் இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்களையும் , இந்தியாவுக்குள் நுழையும் சுரங்கப் பாதையையும் காண்பித்து, “இந்த வழியை முன்பு பழங்குடி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வழியில் இந்தியா செல்ல பாஸ்போர்ட், விசா என்று எந்த ஆவணங்களும் தேவையில்லை.” என்று குறிப்பிட்டுள்ளனர்.
அது சற்று பழைய வீடியோ என்றும் கூறப்படுகிறது. தற்போது வைரலாகும் அந்த வீடியோவில் மொத்தம் 3 பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர், “இந்தியாவில் இருந்து மாடுகள் ஆற்றின் வழியாக வங்கதேசத்துக்கு கடத்தப்படும்.” என்றும் கூறுகிறார். எல்லாவற்றையும் காட்டிவிட்டு கடைசியாக அந்த வீடியோவில், “எந்த ஒரு நாட்டுக்குள்ளும் சட்டவிரோதமாக நுழையக் கூடாது. வங்கதேச நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடாது.” என்றும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் 2 லட்சம் வியூஸ், 7,000 லைக்குகளை கடந்துள்ளது. அதேநேரத்தில் நாட்டின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. “எல்லை பாதுகாப்புப் படை தூங்கிக் கொண்டிருக்கிறார்களா. யூடியூபருக்கு தெரிந்தால் உலகத்துக்கே தெரிந்தது மாதிரிதான். எல்லையில் நம் பாதுகாப்புப் படை என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள்.” என்று சிலர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
மேலும் சிலர், “ஆம் எந்த ஆவணங்களும் இல்லாமல் இந்தியாவுக்குள் வரலாம். அவர்கள் வந்தவுடன் ஆதார் கார்டு, பான் கார்டுகளை காசுக்காக விற்பார்கள். ஏன் அவர்களுக்கு வாக்குரிமை கூட கிடைத்துவிடும் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு எல்லையை பலப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications