ஐஎஸ் தாக்கக்கூடும்: இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை எச்சரிக்கும் யு.எஸ்.
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இங்குள்ள அமெரிக்கர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அண்மையில் வெளியான இந்திய மீடியா தகவல்களை வைத்து பார்க்கும்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவை தாக்க திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் செல்லும் இடங்கள், வழிப்பாட்டுத்தலங்கள், மார்க்கெட்டுகள் மற்றும் திருவிழா நடக்கும் இடங்களை தீவிரவாதிகள் தாக்கலாம்.
இந்த காரணத்தால் இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்கா ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி அறிக்கை வெளியிட்டு தனது குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறியது என்பது குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவுக்கு அதிக அளவில் சுற்றுலா வருவார்கள். இந்நிலையில் அமெரிக்கா இப்படி எச்சரித்துள்ளது சுற்றுலாத்துறையை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications