மாட்டிறைச்சி தடையை மேற்குவங்கத்தில் அமல்படுத்த முடியாது.. மமதா பானர்ஜி திட்டவட்டம்!
மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டத்தை மேற்குவங்கத்தில் அமல்படுத்த முடியாது என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா: மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டத்தை மேற்குவங்கத்தில் அமல்படுத்த முடியாது என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரம்ஜான் மாதத் துவக்கத்தில் ஏன் இப்படி ஒரு தடையை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இறைச்சிக்காக மாடு, ஒட்டகங்களை விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மத்திய அரசின் இந்த திட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கோரி போராட்டங்களும் நடந்து வருகிறது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக மாட்டுக்கறி விருந்துகள் நடைபெற்று வருகின்றன.
மவுனம் காத்த மமதா பானர்ஜி
இந்நிலையில் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் அனைத்திற்கும் தனிமனுஷியாக குரல் கொடுக்கும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மாட்டுக்கறி விவகாரத்தில் இதுவரை கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார்.
மாட்டிறைச்சி தடையை ஏற்கமுடியாது
இந்நிலையில் மமதா பானர்ஜி மாட்டுக்கறி விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய அரசின் மாட்டிறைச்சித் தடையை எங்களால் ஏற்க முடியாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஜனநாயகத்துக்கு எதிரானது
இந்த உத்தரவை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என உறுதியாக கூறினார். மேலும் இந்த உத்தரவு ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் நியாயமற்றது என்றும் அவர் சாடினார்.
ரம்ஜான் மாதத்தின் துவக்கத்தில்..
மாட்டிறைச்சி மீதான தடை மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று கூறிய அவர் ரம்ஜான் மாதத்தின் துவக்கத்தில் ஏன் இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். ஒருவரின் உணவில் தலையிடும் உரிமை அரசுக்குக் கிடையாது என்றும் அவர் சாடினார்.