“அடடே.. இதுவல்லவோ அன்பு”- மனைவிக்காக பிச்சைக்காரர் என்ன பண்ணிருக்கார்னு பாருங்க..நெகிழ்ச்சி சம்பவம்!
போபால்: பிச்சையெடுத்து சேர்த்து வைத்த பணத்தில் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் சாஹூ என்ற நபர்.
இரண்டு கால்களும் செயலிழந்த சாஹூவை அவரது மனைவி முன்னியே தள்ளு வண்டியில் அமரவைத்து தினமும் தள்ளிச் செல்வார். இதனால் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளது.
முதுகுவலியால் தவித்து வந்த தனது மனைவிக்காக, புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார் சந்தோஷ் குமார் சாஹூ.

பிச்சைக்காரர்
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டம் அமர்வாரா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் சாஹூ. இவரது இரண்டு கால்களும் பிறவியிலேயே செயலிழந்தன. இதனால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக இவர் அப்பகுதியில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகிறார். சந்தோஷ் குமாருக்கு முன்னி என்ற மனைவி இருக்கிறார். இவர்களிடம் ஒரு தள்ளு வண்டி இருந்தது.

கணவரை வைத்து தள்ளி
கால்கள் இரண்டு செயலிழந்த சந்தோஷ் குமார் சாஹூவால் நடக்க முடியாது என்பதால் அந்த தள்ளு வண்டியில் தன் கணவரை அமர வைத்து முன்னி தள்ளிக் கொண்டு செல்வார். அவர்கள் இருவரும் சேர்ந்து சிந்த்வாரா பகுதி கோயில்கள், மசூதிகள் அருகே யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து அன்றாடம் ரூ.300 முதல் ரூ.400 வரை யாசகமாகப் பெறுகின்றனர்.

முதுகுவலி
கணவரை அமரவைத்து தள்ளு வண்டியைத் தள்ளித் தள்ளி முன்னிக்கு முதுகு வலி வந்துள்ளது. முதுகுவலியால் அவர் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவராலும் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மனைவியின் கஷ்டத்தை குறைக்கலாம் என நினைத்தால் கால்கள் செயலிழந்ததால் தள்ளுவண்டியை அவரால் பெடல் செய்யவும் முடியாது. இதனாலேயே முன்னி முதுகு வலியைப் பொறுத்துக்கொண்டு அவரை வைத்து தள்ளிக் கொண்டு செல்வார்.

மோட்டார் பைக்
மனைவி படும் கஷ்டத்தை தாங்க முடியாத கணவர் சாஹூ யாசகம் பெற்று சேமித்து வைத்திருந்த பணத்தில் இருந்து 90,000 ரூபாய்க்கு ஒரு மொபட் வாங்கியுள்ளார். இப்போது தனது மனைவியை அதில் அழைத்துச் செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. இப்போது வண்டி இருப்பதால் சியோனி, போபால், இந்தூர் என பல்வேறு பகுதிகளுக்கும் தங்களால் செல்ல முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். மனைவியின் கஷ்டத்தை தீர்க்க வண்டி வாங்கிய பிச்சைக்காரரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications