பெங்களூரில் அமைகிறது ரூ.1800 கோடியில் பிரமாண்ட ஸ்டீல் பாலம்! பெரும் சதி என்கின்றன எதிர்ககட்சிகள்
பெங்களூர்: ரூ.1800 கோடியில் பெங்களூரில் அமைக்கப்பட உள்ள இரும்பு பாலம், எதிர்க்கட்சிகள், குடிமைவாதிகள் எதிர்ப்பால், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சட்டசபை கட்டிடமான விதானசவுதாவுக்கு அருகேயுள்ளது பசவேஸ்வரா சர்க்கிள். இங்கிருந்து 6.72 கி.மீ தொலைவிலுள்ள ஹெப்பால் பகுதி வரை இரும்பால் பாலம் அமைக்கும் திட்டத்திற்கு காங்கிரஸ் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காகும் திட்டச் செலவு ரூ.1800 கோடியாகும்.
எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, சிவில் உரிமை ஆர்வலர்களும் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள். 812 மரங்கள் வெட்டப்படும் என்பதோடு, பாரம்பரிய கட்டிடங்கள் பல சேதமடையும் என்பது அவர்கள் எதிர்ப்புக்கு காரணம்.
உ.பி தேர்தல் செலவுக்கா
மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமியோ, இவ்வளவு அதிக தொகையில் இந்த பாலத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் என்ன என்று கேள்வி எழுப்பியதோடு, அடுத்த வருடம் உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் செலவீனங்களுக்காக காங்கிரஸ் போடும் கமிஷன் ஸ்கெட்ச் இது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். பல மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்துவிட்ட நிலையில், தற்போது அது அதிகாரத்தில் உள்ள ஒரே பெரிய மாநிலம் கர்நாடகாதான். எனவே இதுபோன்ற அதிக செலவு பிடிக்கும் திட்டங்களை கொண்டுவந்து பணத்தை கொள்ளையடிப்பது காங்கிரஸ் திட்டம் என்கிறார் அவர்.
மாபெரும் போராட்டம்
நடிகரும், இயக்குநருமான பிரகாஷ் பெலவாடி, ராஜ்யசபா எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் போன்றோர் சுமார் 8000 மக்களோடு சேர்ந்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தி இத்திட்டத்திற்கான எதிர்ப்பை பதிவு செய்தனர். "இது மிகப்பெரிய தொகை" என எச்சரிக்கிறார் பிரகாஷ் பெலவாடி. பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு டிராபிக் நெரிசல் இன்றி பயணிகள் செல்லவே இத்திட்டம் என அரசு கூறினாலும், ஏற்கனவே அந்த சாலையில் பல குட்டி பாலங்கள் கட்டப்பட்டு டிராபிக் நெரிசல் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
73 சதவீதம் ஆதரவாம்
இந்த திட்டம் 2010லேயே முன்மொழியப்பட்டதாகவும், கிடப்பில் போடப்பட்டதால் திட்ட மதிப்பு கூடிவிட்டதாகவும் குறைபட்டுக்கொள்கிறார் முதல்வர் சித்தராமையா. 73% பெங்களூர்வாசிகள், இரும்பு பாலத்திற்கு ஆதரவு தருவதாகவும், இனிமேலும் தாமதிக்காமல் மேம்பாலத்தை அமைத்தே தீருவேன் என விடாப்பிடியாக உள்ளார் அவர். இந்த திட்டத்தின் செயல்பாடு பற்றி வெளிப்படைத்தன்மை இல்லை என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ளது.
இரும்பால் வீழ்ந்த அரசுகள்
மொத்தத்தில் இரும்பு பாலம் பிரச்சினை, காங்கிரசின் இரும்பு கோட்டையான கர்நாடகாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச தேர்தல் வரும் முன்பு இன்னும் பல 'திட்டங்கள்' கர்நாடகாவில் செயல்படுத்தப்படும் என்று எதிர்க்கட்சிகள் முனுமுனுக்கின்றன. ஜனார்த்தன ரெட்டியின், இரும்பு தாது பிரச்சினையால்தான் முந்தைய எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி வெலவெலத்தது. இப்போது இரும்பு மீண்டும், கர்நாடக அரசியலை துருபிடிக்க வைக்க ஆரம்பித்துள்ளது.