பாரத் பந்த்: தமிழகத்தில் ஒரு பாதிப்பும் இல்லை.. மாநில எல்லைகளில் பஸ்கள் நிறுத்தம்!
சென்னை: நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. பாரத பந்த் காரணமாக தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழகத்தில் வழக்கம் போல கடைகள் திறக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அண்டை மாநில எல்லைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசைக் கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் 10 தொழிற்சங்கங்கள், பொதுத்துறை வங்கிகள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் வர்த்தக நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் தொழிலாளர் நல மசோதாவிற்கு எதிராக முழக்கமிட்டனர். ரயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது.
டெல்லி, மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மட்டுமே பலத்த பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன.
பெங்களூருவில் வேலைநிறுத்ததால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படாமல் இருக்க பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளிலும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை. இருப்பினும் சிலர் வெளியூர்களுக்கு செல்ல பேருந்து நிலையம் வந்திருந்தனர். அவர்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.
தமிழகத்தில் பாதிப்பு இல்லை
தமிழகத்தில் தலைநகர் சென்னையில் பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மாநகரப் பேருந்துகளை வழக்கம் போல் இயங்குகின்றன.
ஆட்டோக்கள் இயங்குவதால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை. மக்கள் பலரும் அலுவலகத்திற்கு சென்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
பேருந்து போக்குவரத்து
வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, தமிழகத்தில் இருந்து அன்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு செல்லும் வாகனங்கள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் பந்த்
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் குமரி மாவட்டத்தில் குழித்துறையிலும், கோவையில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் பேருந்து எல்லை சோதனை சாவடியிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
திருத்தணியில் நிறுத்தம்
சித்தூர், திருப்பதி போன்ற ஊர்களுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் திருத்தணியோடு நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், ஆந்திர அரசின் பேருந்துகள் தமிழகத்திற்கு இயக்கப்படுகின்றன.
போலீஸ் பாழகாப்பு
மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. 9 தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கிண்டி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.