எவனா இருந்தாலும் வெட்டுவேன்.. பாபா ராம்தேவ் பேச்சுக்கு அமித்ஷா ஆதரவு
டெல்லி: பாரத் மாதா கி ஜெய்.. என கூறாதவர்கள் தலையை வெட்டவும் நான் தயங்க மாட்டேன் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியிருந்த நிலையில், அவரது பேச்சுக்கு, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முழு ஆதரவு தெரிவித்துள்ளார். பேச்சு சுதந்திரம் பற்றி பேசுவோர், ராம்தேவ் பேச்சையும் சுதந்திரமாகத்தானே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு சட்டத்திற்கு அஞ்சுவதாகவும் அல்லது, பாரத் மாதா வாழ்க என்று கூறாதவர்கள் தலைகளை லட்சக்கணக்காக இருந்தாலும் வெட்டி விடுவேன் என்றும் பாபா ராம்தேவ் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதுகுறித்து, அமித்ஷாவிடம் டிவி சேனல் ஒன்றில் நிருபர் கேட்டபோது, பாபா ராம்தேவ், பாஜக உறுப்பினர் கிடையாது. மேலும், இந்த நாட்டில் பேச்சு சுதந்திரம் பற்றி பேசுவோர், ராம்தேவுக்கு மட்டும் எப்படி மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை என்று தெரிவித்தார்.
டெல்லி பல்கலை. மாணவர் சங்க தலைவர் கன்யாகுமார், இந்தியாவுக்கு எதிராக பேசியதற்காக கைது செய்யப்பட்டபோது, நாட்டில் பேச்சு சுதந்திரத்துக்கு மதிப்பு இல்லை என்று இடதுசாரிகள் விமர்சனம் செய்தனர். இதற்கு பதிலடி தரும்வகையில், அமித்ஷாவும், ராம்தேவின் தலைவெட்டு பேச்சுக்கு மறைமுகமாக ஆதரவை தெரிவித்துள்ளார்.
பாரத மாதா வாழ்க என கூறாதவர்கள் நாட்டை விட்டு வெளியே போகலாமே.. என்ற மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கருத்து கூறியிருந்தது குறித்து, மத்திய அமைச்சர் வெங்கநாயுடு நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், எனக்கும் பட்னாவிஸ், பாபா ராம்தேவுக்கும், ஒப்பந்தம் எதுவும் கிடையாது. என்னிடம் இக்கேள்வியை கேட்க வேண்டியதில்லை., தனிப்பட்ட முறையில் எனக்கு அந்த பேச்சில் உடன்பாடு இல்லை என்றபோதிலும், நாட்டில் பேச்சு சுதந்திரம் இருப்பதால் பேசியிருப்பார்கள் என்றார்.