ஹரியானா: காங், ஜேஜேபி, சுயேட்சைகள் இணைந்து ஆட்சி அமைக்க பூபிந்தர் சிங் ஹூடா அழைப்பு
Recommended Video
ஹரியானா: காங், ஜேஜேபி, சுயேட்சைகள் இணைந்து ஆட்சி அமைக்க பூபிந்தர் சிங் ஹூடா அழைப்பு
சண்டிகர்: ஹரியானவில் தொங்கு சட்டசபை உருவாகி உள்ள நிலையில் காங்கிரஸ், ஜேஜேபி மற்றும் சுயேட்சைகள் இணைந்து நிலையான ஆட்சி அமைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பீபிந்தர் சிங் ஹூடா அழைப்பு விடுத்துள்ளார்.
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21-ந் தேதி நடைபெற்றது. தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் பெரும்பாலும் பாஜகவே ஆட்சியை தக்க வைக்கும் என அடித்து கூறின.
காங்கிரஸ் கட்சி சிங்கிள் டிஜிட்டுக்கும் போய்விடும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் இன்று காலையில் வாக்கு எண்ணப்பட்டது முதலே அத்தனை கருத்து கணிப்புகளையும் தவிடுபொடியாக்கிவிட்டது காங்கிரஸ். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இல்லாததால் எப்படியும் நமது ஆட்சிதான் என காத்துக் கொண்டிருந்த பாஜகவுக்கு பேரதிர்ச்சிதான் கிடைத்தது.
தேர்தலை புரட்டிப்போட்ட நொடி.. கொட்டும் மழையில் பிரச்சாரம்.. சரத் பவார் கற்றுத்தந்த அரசியல் பாடம்!
பாஜக-காங். கடும் போட்டி
தற்போதைய நிலவரப்படி பாஜக 37 தொகுதிகளிலும் காங்கிரஸ் 35 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி 7; சுயேட்சைகள் 6 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 46 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.
ஹரியானாவில் 'தொங்கு' சட்டசபை
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்பது தெளிவாகிவிட்டது. ஹரியானாவில் தொங்கு சட்டசபை உருவாகி உள்ளதால் ஜேஜேபி மற்றும் சுயேட்சைகள்தான் தீர்மானிக்கும் சக்தியாக மாறி உள்ளன.
பேச்சுவார்த்தை நடத்தும் காங்கிரஸ்
இது தொடர்பாக ஆலோசனை நடத்திய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, ஹரியானா தொடர்பாக எந்த முடிவையும் முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா எடுக்கலாம் என கூறிவிட்டார். இதனையடுத்து ஜேஜேபி, சுயேட்சைகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
ஜேஜேபி, சுயேட்சைக்கு அழைப்பு
தற்போதைய சூழலில் காங்கிரஸ், ஜேஜேபி, சுயேட்சைகள் இணைந்து வலிமையான நிலையான ஆட்சி அமைக்க் வேண்டிய தருணம் இது என பூபிந்தர்சிங் ஹூடா அழைப்பு விடுத்திருக்கிறார். தமக்கு முதல்வர் பதவி கொடுத்தால் ஆட்சி அமைக்க ஆதரவு தருவோம் என்பது ஜேஜேபியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவின் நிலைப்பாடு.
பேச்சுவார்த்தை நடத்தும் ஜேஜேபி
ஜேஜேபியைப் பொறுத்தவரையில் முதல் வாய்ப்பை காங்கிரஸுக்கு கொடுத்திருக்கிறார். அதேநேரத்தில் பாஜகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஜேஜேபியின் ஆதரவுடன் சுயேட்சைகளும் கைகோர்த்தால்தான் அம்மாநிலத்தில் ஆட்சியே அமைக்க முடியும். இதனால் ஹரியானா தேர்தல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது.
மாநில பாஜக தலைவர் ராஜினாமாவா?
இதனிடையே தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ஹரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பாரலா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தாம் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் அப்படி வெளியான தகவல்கள் வதந்தி என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஹரியானா பாஜக தலைவர்களை டெல்லிக்கு வருமாறு அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது