கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம்.. பின்னணி போதைப்பொருள் கும்பல்? அம்பலப்படுத்த முயன்றதால் கொலை? பகீர்
கொல்கத்தா: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அங்குள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலை அம்பலப்படுத்த முயன்றதால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று உடன் பணிபுரியும் மருத்துவர்கள் சில பகீர் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆக.9ம் தேதி கொல்கத்தாவில் உள்ள RG Kar மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை பயிற்சி மருத்துவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.

பகீர் கருத்துகள்: இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் இந்த விவகாரத்தில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அங்கே பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே இந்த கொல்கத்தா மருத்துவர் வழக்கில் உடன் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவர்கள் வேறு சில பகீர் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
அதாவது பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவருக்குப் போதை மருந்து கும்பல் குறித்த தகவல்கள் தெரிந்து இருக்கலாம் என்றும் இதன் காரணமாகவே அவர் குறிவைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் உடன் பணிபுரியும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பெண் மருத்துவர் ஓய்வெடுக்க செமினார் ஹாலுக்கு சென்ற கொஞ்ச நேரத்தில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
"மேற்கு வங்க அரசின் தோல்வி!" கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம்! அரசு பதிலால் கோபமடைந்த ஐகோர்ட் நீதிபதி
தண்டனை: மேலும், மருத்துவரின் டைரியில் 36 மணிநேரம் தொடர்ச்சியாக வேலை செய்வது கடும் மன அழுத்தத்தைத் தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் எதாவது தண்டனை தர வேண்டும் என்றால் இதுபோல தொடர்ச்சியாக ஷிப்ட்களை போடுவார்கள் என்றும் இது வழக்கமானது தான் என்றும் உடன் பணிபுரியும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
போதைப்பொருள் கேங்: இந்த சம்பவத்தை வெறும் பலாத்காரம் மற்றும் கொலை என்று பார்க்க முடியாது என்று உடன் பணிபுரியும் மருத்துவர் கூறுகிறார். இந்த வழக்கில் கைதாகியுள்ள சஞ்சய் ராய்க்கு மருத்துவர் செமினார் ஹாலில் தனியாகத் தான் இருக்கிறார் என்பது எப்படித் தெரியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். ஒரு பெரிய கேங் இதன் பின்னணியில் இருக்கலாம் என்றும் சஞ்சய் ராய் வெறும் கருவிதான் என்றும் அவர் கூறுகிறார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "இதைப் பலாத்காரம், கொலை சம்பவமாக மட்டும் இருக்காது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.. அவரை மட்டும் குறிவைத்து இந்தக் குற்றச் சம்பவம் நடந்துள்ளது. அவர் தனியாக இருந்தது குற்றவாளிக்கு எப்படித் தெரிந்தது" என்று கேள்வி எழுப்புகிறார்.
பகீர் கருத்து: இதேபோல மற்றொரு சக மருத்துவர், "சில விஷயங்கள் குறித்து அவருக்கு (கொலை செய்யப்பட்ட மருத்துவர்) அதிகம் தெரிந்து இருக்கலாம். இங்குப் போதைப்பொருள் கும்பல் இருப்பதாகப் பேச்சு இருக்கிறது. அது குறித்த தகவல்களை அவர் அம்பலப்படுத்த முயன்று இருக்கலாம். அதனால் கூட இந்தக் குற்றச் சம்பவம் நடந்து இருக்கலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை இப்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், குற்றம் நடந்த போது அந்த மருத்துவமனையின் முதல்வராக இருந்தவரிடம் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குற்றம் நடந்த அன்று இரவு அவர் எங்கிருந்தார் என்பது உட்படப் பல கேள்விகளை சிபிஐ அவரிடம் கேட்டுள்ளது. அடுத்தகட்டமாக அங்கே உடன் பணிபுரிந்த மருத்துவர்கள், இதர ஊழியர்களிடமும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது. அதில் வெறு சில பகீர் தகவல்கள் தெரிய வரலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications