பீகார்: பிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு 65% ஆக அதிகரிக்கும் மசோதா அதிரடி நிறைவேற்றம்- நிதிஷ் ராக்ஸ்!
பாட்னா: பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டை 50%-ல் இருந்து 65% ஆக உயர்த்த வகை செய்யும் மசோதா இன்று அம்மாநில சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பீகார் மாநிலத்தில் அண்மையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஜாதி வாரி கணக்கெடுப்பு விவரங்களை மாநில சட்டசபையில் தாக்கல் செய்தது பீகாரில் ஆளும் ஜேடியூ-ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி அரசு.

இந்தியாவில் 1931ம் ஆண்டுதான் ஆங்கிலேயர் ஆட்சியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முதல் முறையாக பீகார் அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி விவரங்களை பகிரங்கப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சட்டசபையில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார், பீகாரில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு அளவை 65% ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார். பின்னர் இந்த 65% இடஒதுக்கீடு முடிவுக்கு பீகார் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது.
இதனடிப்படையில் இன்று பீகார் சட்டசபையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு 65% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

பீகார் மாநிலத்தில் இதுவரையில் இருக்கும் இடஒதுக்கீடு அளவு:
பிற்படுத்தப்பட்டோர்: 30%
ஈபிசி - 18%
ஓபிசி - 12 %
தாழ்த்தப்பட்டோர் : 16%
பழங்குடிகள்: 1%
பிற்படுத்தப்பட்ட பெண்கள்: 3%
மொத்தம் 50% இடஒதுக்கீடு.
தற்போது திருத்தி அமைக்கப்பட்ட இடஒதுக்கீடு அளவு:
பிற்படுத்தப்பட்டோர்: 43%
தாழ்த்தப்பட்டோர் : 20%
பழங்குடிகள்: 2%
மொத்தமாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு அளவு 65% ஆக உயருகிறது.
உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டையும் சேர்த்தால் பீகாரில் இடஒதுக்கீடு அளவு 75%ஆகும். உச்சநீதிமன்றமானது இடஒதுக்கீடு அளவு 50%க்கும் அதிகமாக இருக்கக் கூடாது என தீர்ப்பு வழங்கி இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு 69% இடஒதுக்கீட்டை அரசியல் சாசனப் பாதுகாப்புடன் செயல்படுத்தி வருகிறது. மேலும் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு 50% இடஒதுக்கீடு அளவை மீறுவதுதானே? என்பதும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications